''இதர் ஆவோ..''- தமிழகத்தில் இனி வட இந்தியக் குழந்தைகள் இந்தியிலேயே படிக்கலாம்!
கோவை: தமிழகத்தில் வேலைக்காக குடி பெயர்ந்து வாழ்ந்து வரும் வட இந்தியத் தொழிலாளர்களின் குழந்தைகள் தங்களது தாய் மொழியான இந்தியிலேயே இங்கு கல்வி பயிலும் வசதியை தமிழக அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
வெளி மாநிலங்களிலிருந்து வேலைக்காக தமிழகத்திற்கு வந்து வாழ்ந்து வருவோரின் குழந்தைகள் தங்களது தாய் மொழியிலேயே கல்வி கற்க வசதி செய்யப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்தத் திட்டத்தை மே15ம் தேதி சட்டசபையில் அறிவித்த முதல்வர் ஜெயலலிதா, இதுதொடர்பான கணக்கெடுப்புக்கும் உத்தரவிட்டிருந்தார்.
எங்கு பார்த்தாலும் பீகாரிகள், பெங்காலிகள்
தமிழகத்தில் தற்போது தடுக்கி விழுந்தால் ஏதாவது ஒரு பீகாரி மீதோ அல்லது பெங்காலி மீதோ அல்லது ஆந்திராக்காரர்கள் மீதோதான் விழ வேண்டும். அந்த அளவுக்கு வெளி மாநிலத்தவர்கள் பெருமளவில் தமிழகத்திற்கு குடிபெயர்ந்துள்ளனர்.
பீடா மடிக்க மட்டுமல்ல.. பில்டிங் கட்டவும் இந்திவாலா
தமிழகத்தில் இப்போது இந்திக்காரர்கள்தான் அதிக அளவில் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். தமிழக கட்டுமானத் தொழிலாளர்களுக்கு கடும் போட்டியாக இவர்கள் தற்போது திகழ்கிறார்கள்.
படிக்க வழியில்லை
ஆனால் இப்படி ஆயிரக்கணக்கில் தமிழகத்தில் இவர்கள் குடிபெயர்ந்து வந்து தங்கியிருந்தாலும், இவர்களின் குழந்தைகள் படிக்க வழியில்லாமல் போய் விட்டது. காரணம், பாஷைப் பிரச்சினை.
இனி இந்தியிலேயே படிக்கலாம்
தற்போது இந்த நிலை மாறப் போகிறது. இந்தி பேசும் தொழிலாளர்களின் பிள்ளைகள் இனி இந்தியிலேயே படிக்கும் வாய்ப்பை தமிழக அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
தொழிலாளர் கணக்கெடுப்பு
தமிழகத்தில் குடியெர்ந்துள்ள வெளி மாநிலத்தவர்களின் குழந்தைளை கணக்கெடுத்து அவர்களது சொந்த மொழியிலேயே பாடம் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக நிதி ஒதுக்கப்பட்டு வகுப்புகள் தயார் செய்ய நடவடிக்கைகள் தொடங்கியது.
கோவையில் 402 குழந்தைகள்
கோவை மாவட்டத்தில் குடிபெயர்ந்த வெளி மாநிலத்தவர்களின் குழந்தைகள் 402 பேர் இருப்பது கண்டறியப்பட்டது. இதில் இந்தி பேசுபவர்கள் 99 பேரும், காண்டி மொழி பேசுபவர்கள் 98 பேரும், அசாம் மொழி பேசுபவர்கள் 67 பேரும், தெலுங்கு பேசுபவர்கள் 46 பேரும், பீகாரி மொழி பேசுபவர்கள் 23 பேரும், மலையாளம் பேசுபவர்கள் 19 பேரும், நேபாள மொழி பேசுபவர்கள் 18 பேரும், ஒரியா மொழி பேசுபவர்கள் 17 பேரும், கன்னட மொழி பேசுபவர்கள் 9 பேரும், பெங்காலி மொழி பேசுபவர்கள் 6 பேரும் உள்ளனர்.
118 பேர் ஒன்னாப்பு குழந்தைகள்
இவர்களில் முதல் வகுப்பு படிப்பவர்கள் 118 பேரும், 2-ம் வகுப்பு படிப்பவர்கள் 74 பேரும், 3-ம் வகுப்பு படிப்பவர்கள் 82 பேரும், 4-ம் வகுப்பு படிப்பவர்கள் 37 பேரும், 5-ம் வகுப்பு படிப்பவர்கள் 66 பேரும், 6-ம் வகுப்பு படிப்பவர்கள் 11 பேரும், 7-ம் வகுப்பு படிப்பவர்கள் 9 பேரும், 8-ம் வகுப்பு படிப்பவர்கள் 5 பேரும் உள்ளனர்.
6 முதல் 14 வரை
இந்த சிறுவர்-சிறுமிகள் அனைவரும் 6 முதல் 14 வயது உடையவர்கள். இவர்களுக்கு சொந்த மொழிகளில் கல்வி கற்பிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
விரைவில் டீச்சர்கள் நியமனம்
இவர்களுக்குரிய பாடப் புத்தகங்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் விரைவில் தயாராகி விடுவார்கள் என்றும், அதன் பின்னர் அவர்களுக்கு பாடம் எடுப்பது தொடங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பஹூத் அச்சாஜி....!