சென்னை குடிநீர் தேவைக்கு கிருஷ்ணா நதி நீர் திறப்பு
சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் பருவமழை குறைந்த அளவே பெய்துள்ளது. இதனால் நீராதாரங்கள் அணைத்தும் வறண்டு வருகின்றன. சென்னை நகரின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் ஏரிகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. எனவே குடிநீர் தேவைக்காக ஆந்திரமாநிலம் கண்டலேறு அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள கிருஷ்ணா நதி நீர் 200 கனஅடிநீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நீர் 152 கிலோ மீட்டர் தூரம் பயணித்து பூண்டி நீர்த்தேக்கத்தை வந்தடையும். இதற்கு 3 நாட்கள் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் மாதம் முதல் சென்னைக்கு கிருஷ்ணா நதி நீர் சப்ளை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது நீர் குறைந்த அளவே உள்ளதால் ஒருநாள் விட்டு ஒருநாள்தான் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. அக்டோபர் மாதம் வடகிழக்குப் பருவமழை தொடங்கினால் மட்டுமே ஏரிகள் நிறைந்து குடிநீர் பிரச்சினை தீர வாய்ப்புள்ளது.
முழுவதும் கிடைக்குமா?
தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் கிருஷ்ணா நதி நீரை, கால்வாய்ப் பகுதியை ஒட்டி உள்ள விளை நிலங்களுக்கு ஆந்திர மாநில விவசாயிகள் பயன்படுத்துவதாக தமிழகத்தின் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த புகார் மீது ஆந்திர அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில், தற்போது திறந்துவிடப்படும் நீரும் பெருமளவில் உறிஞ்சப்படும் ஆபத்து உள்ளதாக கூறப்படுகிறது.
எனவே கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் நீர் முழுவதுமாக சென்னைக்கு வந்து சேருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.