சிபிஐக்கு தன்னாட்சி.. சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்!
டெல்லி: மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐக்கு தன்னாட்சி அளிக்கும் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு 41 பக்க பிரமாண பத்திரத்தை இன்று தாக்கல் செய்தது.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் விவகாரத்தில் சிபிஐயின் விசாரணை அறிக்கையை மத்திய சட்ட அமைச்சராக இருந்த அஸ்வனிகுமார் தலையிட்டு திருத்தினார். இதேபோல் பிரதமர் அலுவலக செயலர்களும் இதற்கு உதவியாக இருந்தனர். இதனால் உச்சநீதிமன்றம் கடுமையாக கோபம் கொண்டது. சிபிஐ அமைப்பு என்பது கூண்டுக் கிளியாக இருக்கிறது. .எஜமானர்கள் சொல்வதைச் சொல்லும் கிளிப் பிள்ளையாக இருக்கிறது என்று காட்டம் காட்டியதுடன் சிபிஐ சுதந்திரமாக செயல்பட நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசை வறுத்தெடுத்தது.
பின்னர் சிபிஐக்கு தன்னாட்சி அளிப்பது தொடர்பாக மத்திய அரசு மும்முரம் காட்டியது. மத்திய அமைச்சரவையும் கூடி விவாதித்தது. இந்நிலையில் இது தொடர்பாக இன்று உச்சநீதிமன்றத்தில் 41 பக்க பிரமாணப் பத்திரம் ஒன்றையும் தாக்கல் செய்திருக்கிறது. மத்திய அமைச்சரவையின் பரிந்துரைப் படி தாக்கல் செய்யப்பட்டுள்ள இப்பிரமாண பத்திரத்தில், சிபிஐ இயக்குநரை நியமிக்க ஒரு குழு அமைக்கப்படுகிறது..இக்குழுவில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், தலைமை நீதிபதி இடம்பெறுவர். இக்குழுவின் தலைவராக பிரதமர் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.