இமயமலை கட்டுமானங்கள், சுற்றுலா பயணிகளை ஒழுங்குபடுத்த வேண்டுகோள்!
டெல்லி: உத்தர்காண்ட் மாநில பெருவெள்ள பேரழிவைத் தொடர்ந்து இமயமலைப் பகுதியை பாதுகாக்கப்பட்டதாக அறிவித்து கட்டுமானப் பணிகள், சுற்றுலா பயணிகள் வருகை ஆகியவற்றை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று லிலிங்பிளேனெட் பவுண்டேசன் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
லிவிங்பிளேனெட் பவுண்டேசன் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இமயமலையில் அமைந்துள்ள உத்தர்காண்ட் மாநிலத்தில் ஜூன் 16-ந் தேதியன்று ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஏற்பட்ட கொடூர பேரழிவை உலகம் அதிர்ச்சியுடன் பார்த்தது பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதுடன் கட்டிட இடிபாடுகளுக்கு இடையே எண்ணற்றோர் சிக்கி உயிரிழந்துள்ளனர். ஆன்மீக சுற்றுலாத் தலமாக திகழ்ந்த உத்தர்காண்ட் மாநிலம் இப்போது பேரழிவின் சின்னமாக உருமாறிக் கிடக்கிறது.
உத்தர்காண்ட் பெருவெள்ளப் படங்களைப் பார்க்கும் போது 2004ஆம் ஆண்டு சுனாமி சேதம் நினைவுக்கு வருகிறது. அம்மாநிலத்தில் மீட்புப் பணிகளை ராணுவத்தினர் தீரமுடன் மேற்கொண்டாலும் அரசாங்கத்தின் அனைத்துவகையான மீட்புப் பணிகளிலும் ஒழுங்கான வழிகாட்டுதல்கள் இல்லாமல் ஒருவகையான குழப்பமே இருந்து வந்துள்ளது.
2004ஆம் ஆண்டு சுனாமிக்குப் பிறகு பேரிடர் மேலாண்மை சட்டம் 2005ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன்படி தேசிய பேரிடர் மேலாண்மை மையமானது இதர பேரிடர் மீட்பு நிலையங்களுடன் இணைந்து பயிற்சிகளை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் உத்தர்காண்ட் மாநிலத்தில் இதுபோன்ற பேரிடரை எதிர்கொள்ளக் கூடிய எந்த ஒரு செயல்திட்டமும் இல்லை என்பது வருத்தத்துக்குரியதாகும். ஒரு அவசரகால நிலையைவிட அதிகளவில் அரசும் பேரிடம் மேலாண்மை மையமும் செயல்பட்டிருக்க வேண்டும். தற்போதைய உத்தர்காண்ட் பேரழிவானது இந்த பேரிடம் மேலாண்மை என்பதை இன்னமும் செழுமைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்துகிறது.
இமயமலைப் பகுதியை காப்பாற்றுவதற்கான செயல்திட்டங்களை இந்தியா உருவாக்க வேண்டியது அவசியமாகும். உலக வங்கியின் வரைவுகளுக்கு அமைய குளோபல் ப்ரேம் ஒர்க் உருவாக்கியுள்ள பேரிடர் குறைப்பு நடவடிக்கைகளை அமல்படுத்த வேண்டும். இமயமலைப் பகுதியின் சூழல் பிரச்சனைகளை கண்டறிந்து தீர்வு காண வேண்டும். மின் திட்டங்களுக்காக இமயமலையை குடைதல், பெரிய கட்டுமானங்களை நிர்மாணித்தல் போன்றவற்றின் விளைவுகளைக் கண்டறிய வேண்டும்.
இமயமலை சரணாலயப் பகுதிகள் அனைத்தும் வனப்பகுதிகளால் சூழப்பட்டிருக்கும். அப்படியே கட்டிடங்கள் என்று பார்த்தால் குடிசை வீடுகள்தான் இருக்கும். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாகிவிட்டது. ஆன்மீக சுற்றுலா என்ற பெயரில் வெளிநாட்டில் இருந்து ஏராளமான பயணிகள் குவிகின்றனர் அங்கு. இதனால் அடிப்படை கட்டமைப்புகளை விரிவாகக் வேண்டிய ஒரு சூழல் உருவாகிவிடுகிறது. இதை உள்ளூர் நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும், நீர்மின் திட்டங்கள், சுரங்கப் பாதைகள் போன்றவை உத்தர்காண்ட் மாநிலத்தின் இயற்கை சூழலை சீர்குலைத்து விடும்.
இதனால் இமயமலைப் பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து அனைத்து புதிய கட்டுமானனங்களையும் ஒழுங்குபடுத்த வேண்டும். அதேபோல் ஆன்மீக சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை ஆண்டுதோறும் கட்டுப்படுத்த ஏற்படும். இது ஒன்றும் அரசியல் தற்கொலை அல்ல. உத்தர்காண்ட்டை பாதுகாத்து மறுசீரமைக்க இதுவே தருணம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.