ரூ80,000 கோடி ’தெலுங்கானா பேக்கேஜ்’..ஆந்திர முதல்வருடன் ஆலோசனை நடத்த சோனியா மறுப்பு!
ஆந்திராவை இரண்டாகப் பிரித்து தனித் தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்று அப்பகுதி காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் கோரிக்கை. இதற்காக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த வாரம் டெல்லி சென்றிருந்த ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, தெலுங்கானா தனி மாநிலம் அமைக்காமல் அப்பகுதிக்கு ரூ80 ஆயிரம் கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யம் திட்டம் ஒன்றுக்கான வரைவையும் எடுத்துச் சென்றிருந்தாராம்.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்துப் பேச அனுமதி கேட்டு காத்திருந்தார். ஆனால் சோனியாவோ கிரண்குமார் ரெட்டியை சந்திக்க மறுத்துவிட்டதுடன் காங்கிரஸின் காரியக் கமிட்டியே இதில் இறுதி முடிவெடுக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும் தமது தூதுவராக ஆந்திர பிரதேச மாநிலப் பொறுப்பாளர் திக்விஜயசிங்கை கிரண்குமார் தங்கியிருந்த ஆந்திர பவனுக்கு அனுப்பி வைத்தார்.
ஆந்திர பவனில் சுமார் இரண்டரை மணி நேரம் கிரண்குமார் ரெட்டியுடம் திக்விஜய்சிங் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது தெலுங்கானா விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி என்ன மாதிரியான நிலைப்பாடு எடுத்திருக்கிறது என்பதை அவர் விவரித்திருக்கிறார். மேலும் இந்த விவகாரத்தில் விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்றும் அப்போது ஏற்படும் விளைவுகளை சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்றும் கிரண்குமாரிடம் திக்விஜய்சிங் கூறியிருக்கிறாராம்.
இதனால் மிகுந்த ஏமாற்றத்துடன் கிரண்குமார் ரெட்டி ஹைதராபாத் திரும்பியதாக கூறப்படுகிறது.