டாடா சொன்ன அட்வைஸ் என்ன? இந்திய விமான சேவை சாத்தியமா? விவரிக்கிறார் ஏர் ஏசியா டோனி பெர்னாண்டஸ்
மும்பை: டாடா சன்ஸ் குழுமத்துடன் இணைந்து இந்தியாவில் மலேசியாவில் ஏர் ஏசியா நிறுவனம் விமான சேவையை தொடங்க இருக்கிறது. ஏர் ஏசியாவின் நிறுவனர் மலேசியாவில் பிறந்த இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர். மும்பையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து ஏர் ஏசியாவின் இந்திய தலைவரான மிட்டு சாண்டில்யாவை அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு டோனி பெர்னாண்டஸ் அளித்த நேர்காணலின் சுருக்க வடிவம்:
குறைவான கட்டணம்
சரியான கட்டண கட்டமைப்பை நாங்கள் வைத்திருக்கவில்லை எனில் வெற்றி பெறுவது கடினம். மலேசியா, தாய்லாந்து, லாவோஸில் இருந்து இந்தியா வேறுபட்ட ஒரு நாடு அல்ல. இந்தியாவில் ஏற்கெனவே நாங்கள் எங்களது விமான சேவையை இயக்கி இருக்கிறோம். இதனால் இங்கே என்ன மாதிரியான பிரச்சனைகள் இருக்கின்றன என்பதை அறிவோம். உங்களிடம் 2 விமானங்கள் இருக்கும் போது ஒரு சரியான கட்டண கட்டமைப்பை வைத்திருக்க முடியாது. ஆனால் 11 அல்லது 12 விமானங்கள் இருந்தால் எப்படி இருக்கும் என யோசியுங்கள்..
ரத்தன் டாடாவின் அறிவுரை என்ன?
என்னைப் பொறுத்தவரையில் மலேசியாவில் எப்படி வெற்றி பெற்றேன் என்ற அடிப்படையை மாநில அரசுகளிடம் விளக்குவேன். விமான விலை எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. ஆனால் உள்ளூர் சேவையை அதிகப்படுத்துவதன் மூலம் எப்படி அரசுக்கு வருமானம் கிடைக்கிறது என்பதை விளக்குவேன்.
ரத்தன் டாடா எனக்கு என்ன அறிவுரை கூறினார் என்பதை நான் புத்தகம் எழுதும்போது வெளிப்படுத்துவேன். மும்பையிலும் ஹைதராபாத்திலும் விமானநிலைய வரி கட்டணம் மிக அதிகமாக இருந்ததால் இந்தியாவை விட்டு நாங்கள் வெளியேற வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டது.
ஆசியாவிலேயே அதிக ஊதியம்
ஆசியாவிலேயே ஏர் ஏசியா விமான நிறுவனத்தில்தான் கூடுதல் ஊதியம் கொடுக்கப்படுகிறது. அப்போதுதான் விமானத்தின் மீது விமானிகளுக்கு அக்கறை ஏற்படும். எரிபொருளை சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். ஆயிரம் முறை விமானிகளிடம் சொன்னாலும் அது நடைமுறைக்கு வராது. 40% எரிபொருள் விலை என்பது 50% ஆக வேண்டுமானால் உயரலாம். அதனால்தான் விமானிகளுக்கு இயல்பாகவே அக்கறையை உருவாக்கவே கூடுதல் ஊதியம் கொடுக்கிறோம். இதை அவர்கள் மனதில் கொள்ளவில்லை எனில் இந்த நிறுவனத்தை அவர்கள் நேசிக்கவில்லை என அர்த்தம்.
சீரான திட்டமிட்ட சேவை
அமெரிக்காவில் செப்டம்பர் மாதம் இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட பிறகு 3 நாட்களில் எங்களது விமான சேவை தொடங்கியது. இந்தியாவை விட மோசமான சந்தைகளை எல்லாம் எதிர்கொண்டுவிட்டோம். இப்போதுதான் இந்திய சந்தை எங்களுக்கு சாதகமானதாக இருக்கிறது. இந்தியாவில் 1.2 பில்லியன் மக்கள் இருக்கின்றனர். பலரும் இந்தியாவுக்கு வருகை தரவே விரும்புகின்றனர். இது எளிதானது ஒன்று அல்ல..
கிங்ஸ்பிஸர் நிறுவனமானது குறைவான கட்டணத்தில் தொடங்கினாலும் பின்னர் ஏர் டெக்கானை விலைக்கு வாங்கியது. அது எப்படி எனில் கெட்ட பிரியாணியைப் போன்றது. எங்களைப் பொறுத்தவரை ஏர்பஸ் ஏ320 விமானம்தான்.. 180 இருக்கைகள்.. அதிகபட்சம் பறக்கும் நேரம் 4 மணி நேரம்தான்.. இதை தொடர்ந்து நாங்கள் கடைபிடித்து வருவதால் இயங்க முடிகிறது என்றார்.