ஸ்னோடென் சந்தேகம்: பொலிவிய அதிபரின் விமானம் ஐரோப்பாவில் கட்டாய தரை இறக்கம்!
உலக நாடுகளை அமெரிக்கா எப்படியெல்லாம் வேவு பார்த்தது என்பதை அம்லப்படுத்தி அதிர்வலைகளை ஏற்படுத்தியவர் ஸ்னோடென். அவர் மீது தேசத் துரோக வழக்கைப் பதிவு செய்து அமெரிக்கா தேடி வருகிறது. அவர் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் இருந்து மாஸ்கோ வழியாக அமெரிக்கா எதிர்ப்பு நாடு ஒன்றில் அடைக்கலம் கோர முடிவு செய்தார். இதற்காக மாஸ்கோ விமான நிலையத்தில் மாற்று விமானம் செல்வதற்கான பகுதியில் அவ்ர் ஒரு வார காலத்துக்கும் மேலாக காத்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ரசியாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பொலிவிய அதிபர் கலந்து கொண்டார். பின்னர் அவர் அங்கிருந்து நாடு திரும்பிக் கொண்டிருந்தார். ஆனால் பொலிவியா அதிபர் ஈவோ மோரல்ஸ் பயணம் செய்த விமானத்தில் ஸ்னோடென்னும் பயணிப்பதாக ஒரு சந்தேகம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் கூட்டு நாடுகளான பிரான்ஸும் போர்ச்சுகலும் ஈவோ மோரல்ஸின் விமானம் தங்களது நாடுகளின் வான்பரப்பு மீது பறக்க தடை விதித்தன.
இதைத் தொடர்ந்து ஆஸ்திரியா நாட்டில் அவர் பயணித்த விமானம் தரை இறக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. ஆனால் அதில் ஸ்னோடென் இல்லை என தெரியவந்த பின்னர் புறப்பட அனுமதிக்கப்பட்டது. அமெரிக்கா மற்றும் அதன் கூட்டு நாடுகளின் இந்த நடவடிக்கைக்கு பொலிவியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தங்களது நாட்டின் அதிபரை கடத்த அமெரிக்கா முயற்சி செய்ததாக பொலிவியாவின் துணை அதிபர் புகார் கூறியுள்ளார். இதேபோல் தங்கள் நாட்டின் அதிபரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட பிரான்சு நாட்டுக்கு எதிராக அந்நாட்டு தூதரகம் முன்பாக பொலிவிய அதிபரின் ஆதரவாளர்கள் போராட்டமும் நடத்தினர்.