கங்கை முதல் நெய்யாறு வரை நதிகளை இணைக்க கோரி திமுக எம்.பி. மனு
சென்னை: கங்கை முதல் கன்னியாகுமரியின் நொய்யாறு வரை உள்ள அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும் என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர்டம் தி.மு.க. எம்.பி. தங்கவேல் மனு ஒன்றை அளித்துள்ளார்.
தொடரும் பருவமழை பொய்ப்பால் தமிழகத்தில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழகத்துக்கு உரிய நீர் பங்குகளை தர அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகியவை மறுத்துவருகின்றன. இதனால் நாடு முழுவதும் உள்ள நதிகளை இணைக்க வேண்டும் என்ற குரல் தொடர்ந்தும் எழுந்து வருகிறது. இது தொடர்பாக உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பும் வழங்கியுள்ளது.
இதனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த குழு ஒன்றை அமைத்து கங்கை முதல் கன்னியாகுமரியின் நெய்யாறு வரை அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும் என்று தி.மு.க. எம்.பி. தங்கவேல் இன்று டெல்லியில் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் ஹரீஷ் ராவத்தை சந்தித்து மனு அளித்தார். மேலும் அண்டை மாநிலங்களில் இருந்து கடலில் வீணாக கலக்கும் நீரை தமிழகத்துக்கு திருப்பிவிடவும் இம்மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது தி.மு.க. வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார்.