கேரியர் பேக்கில் கேக்கை 'சுட்டு'.. ஐயங்கார் பேக்கரியில் அட்டகாசம் செய்த ஏட்டு!!
நாமக்கல்: நாமக்கல்லில் பேக்கரிக்குள் புகுந்து பிஸ்கட் மற்றும் கேக் திருடிய ஏட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் ஏட்டாக இருப்பவர் பிரகலநாதன்(44). அவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். சாலை ஓரங்கள் மற்றும் ஊருக்குள் இருக்கும் இரவு நேர டீக்கடைகள் இரவு 11 மணி முதல் அதிகாலை 4.30 மணி வரை அடைத்திருக்கப்பட வேண்டும் என்று போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
எந்த கடையாவது உத்தரவை மீறி திறந்திருந்திருக்கிறதா என்று கண்காணித்து வந்த ஏட்டு சேலம்-நாமக்கல் பைபாஸ் சாலையில் பாச்சல் பிரிவு ரோட்டில் இருக்கும் ஐயங்கார் பேக்கரிக்கு சென்றுள்ளார். கடை ஊழியர்கள் வெளிப்புறம் துணி திரையால் கடையை மூடிவிட்டு உள்ளே தூங்கிக் கொண்டிருந்தனர்.
இந்த நேரத்தில் ஏட்டு மெதுவாக பேக்கரிக்குள் சென்று விலை உயர்ந்த கேக்குள், பிஸ்கட் ஆகியவற்றை எடுத்து 2 கேரி பேக்கில் போட்டுக் கொண்டு நைசாக நழுவிவிட்டார். காலையில் எழுந்த ஊழியர்கள் கடையில் உள்ள சரக்கு குறைந்துள்ளதை பார்த்தனர். உடனே அவர்கள் கடையில் இருந்த சிசிடிவி கேமராவை போட்டுப் பார்த்தபோது அதில் ஏட்டு பிஸ்கட், கேக் திருடியது பதிவாகி இருந்தது.
இது குறித்து கடை நிர்வாகம் மாவட்ட எஸ்பி கண்ணம்மாளிடம் புகார் கொடுத்தது. அவர்களின் புகாரின்பேரில் ஏட்டு பிரகலநாதன் நாமக்கல் மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். பின்னர் நேற்று அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.