கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் காதலியின் கழுத்தை நெறித்துக் கொன்றவர் கைது
சென்னை: கேளம்பாக்கம் அருகே உள்ள பண்ணை வீட்டில் காதலியை கழுத்தை நெறித்துக் கொன்ற காதலனை போலீசார் கைது செய்தனர்.
கேளம்பாக்கத்தை அடுத்து உள்ள வெளிச்சை கிராமத்தில் சென்னை தி.நகரைச் சேர்ந்த பன்னீர் செல்வம் என்பவரின் பண்ணை வீடு உள்ளது. 50 ஏக்கரில் உள்ள பண்ணை வீட்டின் காவலுக்கு 15 நாய்கள் வளர்க்கப்படுகின்றன.
புதுக்கோட்டை மாவட்டம் போச்சம்பள்ளியைச் சேர்ந்த ராமையா என்பவர் இந்த பண்ணை வீட்டில் தங்கி தோட்டப் பணிகளை கவனித்து வருகிறார். மேலும் அவர் அருகில் உள்ள நாவலூர் தனியார் நிறுவனம் ஒன்றிலும் பணிபுரிகிறார். அவருடன் மகள் செல்வநாயகியும் தங்கியிருந்தார். செல்வநாயகி தோட்ட வேலைகளை பார்ப்பதுடன், நாய்களையும் பராமரித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நாய்களுக்கு உணவு வைக்க சென்ற செல்வநாயகி வெகுநேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து பன்னீர் செல்வத்தின் மனைவி சுகுணா செல்வநாயகியை தேடிச் சென்றபோது அவர் பண்ணை வீட்டின் பின்புறம் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
பிணத்தைப் பார்த்த சுகுணா அலற அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் ஓடி வந்தனர். இது குறித்து தகவல் அறிந்த கேளம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்வநாயகியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இத்தனை காவல் உள்ள தோட்டத்துக்குள் வெளியாட்கள் எளிதில் நுழைய முடியாது என்பதால் போலீசாரின் சந்தேகப் பார்வை அங்கு பணிபுரிபவர்களின் மீது விழுந்தது.
இதையடுத்து தோட்டத்தில் வேலை பார்ப்பவர்களிடம் விசாரணை நடத்தியதில் பிளம்பர் கண்ணன்(32) என்பவர் செல்வநாயகியை காதலித்தது தெரிய வந்தது. தோட்டத்துக்கு அருகில் உள்ள ஏரி எதிர்வாயல் கிராமத்தைச் சேர்ந்த கண்ணனின் தாயும் அதே தோட்டத்தில் வேலை செய்துள்ளார். இதையடுத்து போலீசார் கண்ணனை பிடித்து விசாரித்தபோது செல்வநாயகியை கொன்றதை ஒப்புக் கொண்டார்.
இது குறித்து அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,
செல்வநாயகியை நான் உயிருக்கு உயிராக காதலித்தேன். அவளுக்கு அடிக்கடி செலவுக்கு பணம் கொடுத்தேன். நிறைய பொருட்களையும் வாங்கி கொடுத்தேன். செல்வநாயகி மற்ற வாலிபர்களுடன் பேசுவது எனக்கு பிடிக்கவில்லை. இதுபற்றி அவளிடம் நான் கேட்டேன். இப்போது திருமணத்துக்கு முன்னரே என்னை கட்டுப்படுத்த நினைக்காதே என்று கூறி என்னிடம் சண்டை போட்டாள். உனது பேச்சை கேட்க முடியாது என்றும் கூறினாள்.
இதையடுத்து செல்வநாயகியை தீர்த்து கட்ட முடிவு செய்தேன். எனது பேச்சை கேட்காமல் என்னையும் அவதூறாக பேசிய அவளை கொலை செய்வதற்காக தோட்டத்தில் முன் கூட்டியே நான் பதுங்கி இருந்தேன். நாய்களுக்கு உணவு போடுவதற்காக நைட்டியுடன் செல்வநாயகி வந்தார். அப்போது அவளை கீழே தள்ளி தோளில் கிடந்த துண்டை எடுத்து கழுத்தை இறுக்கி கொன்றேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.