போலீசில் தஞ்சமடைந்த கலப்பு திருமண காதல் ஜோடி
விழுப்புரம்: விழுப்புரம் அருகே, காதலித்து கலப்புத் திருமணம் செய்து கொண்ட ஜோடி ஒன்று, உயிருக்கு ஆபத்து எனக் கூறி, பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளகுறிச்சி அருகே உள்ள மலைகோட்டாலம் கிராமத்தை சேர்ந்த அஞ்சாமணி, வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர். அவர் அதே பகுதியில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த சுப்ரமணியை கடந்த இரண்டு வருடமாக காதலித்து வந்துள்ளார். இருவரும் சமீபத்தில் வீட்டுக்கு தெரியாமல் பதிவு திருமணம் செய்துள்ளனர்.
இவர்களின் காதல் மற்றும் கலப்பு திருமண விஷயம் சில தினங்களுக்கு முன்னதாக அஞ்சாமணியின் பெற்றோருக்கு தெரியவந்தது. ஆத்திரமடைந்த அவரின் பெற்றோர் ஜாதியை காரணம் காட்டி இருவரையும் பிரிக்க முயற்சி செய்துள்ளனர். உஷாரான காதல் ஜோடி வீட்டில் இருந்து வெளியேறி தற்போது விழுப்புரம் மாவட்ட காவல்த்துறை கண்காணிப்பாளர் மனோகரிடம் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இது குறித்து அஞ்சாமணி கூறியதாவது, ‘என் பெற்றோர், நான் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டேன் என்பதற்காக என்மீதும், என் கணவர் மற்றும் அவரது பெற்றோர்கள் மீதும் ரவுடி கும்பலை வைத்து கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். என் கணவர் மீது வரஞ்சரம் காவல் நிலையத்தில் பொய்யான புகார் அளித்துள்ளனர். அவர்களால் என் உயிருக்கும் என் கணவர் உயிருக்கும் ஆபத்து உள்ளது. அதனால், எங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொதுத்து தஞ்சம் அடைந்துள்ளோம்' எனத் தெரிவித்துள்ளார்.