வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது சென்னை இளைஞர்!
சென்னை: மதுரையிலிருந்து சென்னை நோக்கி வந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது சென்னையைச் சேர்ந்த இளைஞர் நாகராஜ் என்பது தெரியவந்துள்ளது. அந்த இளைஞரை பிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரையில் இருந்து நேற்று காலை 6.50 மணிக்கு புறப்பட்டு காலை 8.55 திருச்சிக்கு வந்தது வைகை எக்ஸ்பிரஸ் ரயில். அப்போது சென்னை தெற்கு ரயில்வே நிலையத்துக்கு தொடர்பு கொண்டு போனில் பேசிய மர்ம நபர் ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். அத்துடன் முடிந்தால் என்னை பிடித்துக் கொள்ளுமாறும் மர்ம நபர் சவால் விட பெரும் பீதி ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து திருச்சி ரயில் நிலையத்தில் வைகை எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டு அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது. சுமார் 2 மணி நேர சோதனைக்குப் பிறகு வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மிரட்டல் விடுத்த நபரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது.
போலீசாரின் தீவிர நடவடிக்கையில் அந்த செல்போனுக்குரிய நபர் சென்னை திருவேற்காட்டை சேர்ந்த வாலிபர் நாகராஜ் என்பவர் என தெரிய வந்தது. அவர் நேற்று காலை 9 மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் அருகில் இருந்து பேசியதும் அதன்பிறகு ஸ்ரீரங்கம் பகுதியில் சுற்றியது தெரிய வந்துள்ளது. இதனால் அவர் திருச்சியிலேயே இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் போலீசாருக்கு நாகராஜ் அனுப்பிய எஸ்.எம்.எஸில் தம்மை மன்னித்துவிடுமாறு கூறியிருக்கிறான். இதனால் விரைவில் அவன் சிக்கிவிடுவான் என தெரிகிறது.