சுப்ரீம் கோர்ட் நீதிபதி 2 ஆண்டுகாலம் பதவியில் நீடிக்க சட்ட திருத்தம்: வைகோ வலியுறுத்தல்!
சென்னை: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி 2 ஆண்டுகள் பதவியில் நீடிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக தமிழர் சதாசிவம் பொறுப்பேற்பதற்கு வாழ்த்து தெரிவித்து வைகோ இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மண்டகுளத்தூரில் பிறந்த பதஞ்சலி சாஸ்திரி, 1952 ஆம் ஆண்டில், இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பு ஏற்றார். 61 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழகம் தந்த நீதிபதி சதாசிவம் அப்பதவியை ஏற்பது மகிழ்ச்சி அளிக்கின்றது. அவருக்கு மதிமுக சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஈரோடு மாவட்டம், பவானி வட்டத்தில் உள்ள கடம்பநல்லூர் கிராமத்தில், விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் நீதிபதி சதாசிவம்.
ஓராண்டு கூட பதவியில் இல்லையே..
இந்திய உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்ற தற்போது 65 வயதும், உயர்நீதிமன்றங்களில் பணியாற்ற 62 வயதும் வரம்பாக உள்ளது. இதுவரையிலும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பொறுப்பு வகித்த 39 பேர்களுள், 14 பேர்கள், அந்தப் பதவியில் ஓராண்டுகூடப் பணி ஆற்றமுடியவில்லை. நான்கு பேர், ஒரு மாதம் மட்டுமே தலைமை நீதிபதியாகப் பொறுப்பு வகித்து உள்ளனர்.
யார்? யார்? எத்தனை நாள்கள் பதவி வகித்தனர்?
1966 - அமல்குமார் சர்கார் - 105 நாள்கள்
1967 - கோகா சுப்பாராவ் - 285 நாள்கள்
1967 - கைலாஷ்நாத் வாஞ்சு - 318 நாள்கள்
1970 - ஜெயந்திலால் கோட்டலால் ஷா - 35 நாள்கள்
1989 - ஈ.எஸ். வெங்கட்ராமையா - 181 நாள்கள்
17 நாட்கள் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
1989 - சவ்யசச்சி முகர்ஜி - 281 நாள்கள்
1991 - கமல்நாராயண் சிங் - 17 நாள்கள்
1992 - லலித்மோகன் சர்மா - 85 நாள்கள்
1997 - ஜெ.எஸ். வர்மா - 298 நாள்கள்
1998 - மதன்மோகன் புஞ்சி - 264 நாள்கள்
41 நாட்கள் தலைமை நீதிபதி
2002 - புபிந்தர்நாத் கிர்பால் - 186 நாள்கள்
2002 - ஜி.பி. பட்நாயக் - 41 நாள்கள்
2004 - ராஜேந்திர பாபு - 30 நாள்கள்
2011 - அல்டாமஸ் கபீர் - 275 நாள்கள்
நீதிபதி சதாசிவம்.. 9 மாதங்கள்தான்
நீதிபதி சதாசிவம், வருகின்ற 26.04.2014 இல், ஓய்வு பெறும் வயதை எட்டி விடுவார். எனவே, 9 மாதங்கள் மட்டுமே, இவர் தலைமை நீதிபதியாகப் பணியாற்ற முடியும். அவருக்குப் பின்னர் இந்தப் பொறுப்புக்கு வரவிருக்கின்ற நீதிபதி லோதாவும், ஐந்து மாதங்கள்தாம் அப்பதவியில் இருக்க முடியும்.
2 ஆண்டு காலத்துக்கு நீடிக்க வேண்டும்
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பொறுப்பில் இருப்பவர்கள், குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது அந்தப் பொறுப்பில் இருந்தால்தான், நீதித்துறையில் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களைச் செய்திட இயலும். உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது குறித்து, அரசியல் நிர்ணய சபையில் 24.05.1949 ல் கருத்துத் தெரிவித்த பண்டித நேரு, ‘அமெரிக்க உச்சநீதிமன்றத்தில், 30-40 ஆண்டுகளுக்கும் மேலாக, 92 வயது வரையிலும் கூட நீதிபதிகள் பணி ஆற்றுகிறார்கள். இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்பதைவிட, நீதித்துறையைப் பொறுத்தமட்டிலும் அனுபவம் வாய்ந்த திறமையாளர்களே தேவை என்பதால், வயதை ஒரு வரம்பாகக் கொள்ளக்கூடாது' எனறார்.
வெங்கடாசலய்யா குழு பரிந்துரை சொல்வது என்ன?
அமெரிக்காவில் ஃபெடரல் நீதிபதிகளுக்கு ஓய்வு வயது இல்லை. ஆனால், அவர்களது பதவிக்காலம் வரையறுக்கப்படுகிறது. அமெரிக்காவில், மாநிலத்துக்கு மாநிலம் நீதிபதிகளின் ஓய்வு வயது வேறுபட்டாலும், அது 70 முதல் 75 ஆகவே உள்ளது. இங்கிலாந்தில், 75 ஆக உள்ளது. இந்திய உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பணி குறித்து ஆராய அமைக்கப்பட்ட நீதிபதி வெங்கடாசலய்யா குழு, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 68 ஆகவும், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 65 ஆகவும் உயர்த்திட வேண்டும் என, கடந்த 2002 ஆம் ஆண்டு பரிந்துரை செய்தது.
தலைமை நீதிபதி நியமனத்தில் மாற்றம் தேவை
உயர்நீதிமன்ற நீதிபதிகளைத் தேர்ந்து எடுப்பதற்கு, மாநில உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் மூத்த நீதிபதிகள் இருவர் கொண்ட குழு பெயர்களைப் பரிந்துரைக்கின்றது. அவற்றை, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, மூத்த நீதிபதிகள் கொண்ட குழு பரிசீலித்து, தகுந்தோரை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய, குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைக்கின்றனர். இந்த நடைமுறை மாற்றப்பட வேண்டும்; நீதிபதிகள் நியமனங்களைப் பரிந்துரை செய்ய, தனியாக ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று, சட்ட அமைச்சர் கபில் சிபல் ஒரு கருத்துத் தெரிவித்து உள்ளார்.
2ஆண்டு நீடிக்க சட்ட திருத்தம்
இந்தக் கருத்து குறித்து, சட்ட வல்லுநர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்களிடம் உரிய ஆலோசனை பெற வேண்டும்; வெளிப்படையான விவாதம் நடைபெற வேண்டும். எந்த நிலையிலும், நீதிபதிகள் நியமனத்தில் அரசியல் புகுந்து விட இடம் அளித்து விடக் கூடாது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பொறுப்பு ஏற்கின்றவர்கள், குறைந்தது இரண்டு ஆண்டுகள் அப்பொறுப்பில் நீடிக்கின்ற வகையில், சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என மதிமுக சார்பில் வலியுறுத்துகின்றேன் என்று கூறியுள்ளார்.