ஜார்க்கண்ட் புதிய அரசு அமைப்பதில் சிக்கல்.. காங்., ஜேஎம்எம் பேச்சில் இழுபறி
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடர்கிறது. இழுபறியும் நீடிக்கிறது.
இந்த இழுபறி இன்னும் சில நாட்கள் நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் பதவிகளைப் பங்கு போட்டுக் கொள்வதில்தான் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
அடுத்த முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவர் ஹேமந்த் சோரன்தான் பதவியேற்கவுள்ளார். அவர் தனது கட்சி சார்பில் அமைச்சராவோர் மற்றும் எந்தெந்த துறை தேவை என்ற பட்டியலை இன்னும் இறுதி செய்யாமல் உள்ளார். இதன் காரணமாக ஹேமந்த் சோரன் மற்றும் சோனியா காந்தி சந்திப்பும் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு 18 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். காங்கிரஸுக்கு 13 பேர் உள்ளனர். ராஷ்டிரிய ஜனதாதளத்திற்கு 5 பேர் உள்ளனர். இந்தக் கட்சியும் இக்கூட்டணியை ஆதரிப்பதால் லாலு கட்சிக்கும் ஒரு அமைச்சர் பதவி தரவுள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முன்பு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும், பாஜகவும் கூட்டணி வைத்து ஆட்சியமைத்தன. ஆனால் திடீரென இந்தக் கூட்டணி முறிந்தது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் குடிரயரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. சட்டசபை சஸ்பெண்ட் செய்யப்பட்டது. தற்போது காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியமைக்க ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா முயற்சித்து வருகிறது.