ரூட் தல பிரச்சினை: சென்னையில் அடிக்கடி நடக்கும் மாணவர் மோதல்
சென்னை: சென்னையில் பிரசிடென்சி கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து பதற்றம் உருவானதால் அங்கு நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் 27 எச், 29 ஏ வழித்தடத்தில் "ரூட் தல யார்" என்பது மாணவர்களின் தலையாய பிரச்சினையாக உள்ளது. இதனையடுத்து இன்று பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள் மோதிக் கொண்டனர். இதில் இரண்டு மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மோதல் தொடர்பாக 3 மாணவர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு காரணமாக கல்லூரி முன்பு காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்கதையாகும் மோதல்
சென்னை பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள் அண்மை காலமாக அடிக்கடி மோதிக் கொள்கின்றனர். அரசு கல்லூரி மாணவர்கள் மோதிக்கொள்ளும் சம்பவம் தொடர்கதை போல் நீடித்து வருகிறது. பிரசிடென்சி கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இடையே அடிக்கடி மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது.
மாணவர்கள் காயம்
கல்லூரி தொடங்கி 2 வாரத்திற்குள் மாணவர்கள் மீண்டும் மோத தொடங்கி விட்டனர். இரண்டு நாட்களுக்கு முன்பு மாநில கல்லூரி மாணவர்கள் தாக்கியதில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 3 பேர் காயம் அடைந்தனர்.
அலறிய பொதுமக்கள்
திருமங்கலம் சிக்னலில் நடந்த இந்த மோதலை பார்த்து பொதுமக்கள் வேதனை அடைந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட 6 கல்லூரி மாணவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். அந்த சம்பவம் மறைவதற்குள் நேற்று மீண்டும் புதுக் கல்லூரி- நந்தனம் கலைக் கல்லூரி மாணவர்கள் மோதிக் கொண்டனர். கத்தியுடன் மோதிக் கொண்டனர். இதை பார்த்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இரு மாணவர்கள் கைது
நிலைமை மோசமானதால் டிரைவர் நேராக ராயப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றார். இந்த மோதலில் புதுக்கல்லூரியை சேர்ந்த சவியுல்லா, ஹயாத் ஆகிய இருவரும் கத்தி குத்தில் காயம் அடைந்தனர்.
ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அண்ணா சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நந்தனம் கலைக் கல்லூரியை சேர்ந்த இரண்டு மாணவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ரூட்டு தல யார்?
கல்லூரிகளுக்கு தினமும் பஸ்சில் சென்று வரக்கூடிய மாணவர்கள் ஒரு குழுவாக செயல்படுகிறார்கள்.இதில் ஒவ்வொரு ரூட்டுக்கும் ஒரு தலைவரை தேர்வு செய்து ‘ரூட்டு தல' என்று பட்டம் சூட்டுகின்றனர். இன்றைய மோதலுக்கு அதுதான் காரணமாகிவிட்டது. தினசரி நடைபெறும் மாணவர்களின் மோதலினால் பொதுமக்களும் பாதிப்பிற்குள்ளாகின்றனர். எனவே போலீசார் இவற்றை வேடிக்கை பார்க்காமல் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.