டெல்லி: மருத்துவ மாணவி பாலியல் வழக்கு... ஜூலை 11ல் தீர்ப்பு
டெல்லி: டெல்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் ஜூலை 11ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒடும் பேருந்தில் மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
10 நாள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் மரணத்தை தழுவினார். இது கொலை வழக்காக மாற்றப்பட்டது. இந்த சம்பவத்திற்கு காரணமான அனைவரும் கைது செய்யப்பட்டனர். ஒரு குற்றவாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் 5 பேருக்கு தண்டனை கிடைக்கும் என்று தெரிகிறது.
இந்த வழக்கின் விசாரணை இந்திய இளைஞர் நீதி விசாரணை தீர்ப்பாயத்தில் நடந்து வந்தது. 'இந்த வழக்கில் வரும் 11ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும்' என நீதிபதி கூறியிருக்கிறார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய குற்றவாளியான 17 வயது இளைஞன், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்திருக்கிறான். இவன் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டால், மூன்று ஆண்டுகள் சீர்திருத்தப்பள்ளியில் தடுப்புக்காவல் தண்டனை வழங்க வாய்ப்புண்டு.
மாணவி, கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் இந்தியாவை அதிர்ச்சியடைய வைத்தது. இதன்பின்னர் பெண்கள் பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் இன்றைக்கும் டெல்லியில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.