ஸ்னோடெனுக்கு அடைக்கலம் தர தயார்: வெனிசுலா, நிகரகுவா அறிவிப்பு!
மனாகுவா: அமெரிக்காவால் தேசதுரோகியாக அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வரும் ஸ்னோடெனுக்கு அடைக்கலம் தர தயாராக இருப்பதாக வெனிசுலா மற்றும் நிகரகுவா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளது.
உலக நாடுகளை அமெரிக்கா எப்படியெல்லாம் வேவு பார்த்தது என்ற தகவல்களை வெளியிட்டவர் ஸ்னோடென். இதனால் அமெரிக்கா அதிர்ந்து போனது. அத்துடன் ஸ்னோடென் மீது தேசத் துரோக வழக்கும் பாய்ந்தது. இதனால் அவர் அமெரிக்காவைவிட்டு வெளியேறினார்.
சீனாவின் ஹாங்காங்கில் தங்கியிருந்த அவர் பின்னர் அங்கிருந்து வெளிநாடு ஒன்றுக்கு செல்வதற்காக மாஸ்கோ விமானநிலையம் சென்றார். அங்கேயே கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஸ்னோடென் தங்கியிருந்து இந்தியா உட்பட 19 நாடுகளிடம் அடைக்கலம் கோரியினார். ஆனால் இந்தியா, ஸ்னோடெனுக்கு அடைக்கலம் தர மறுத்துவிட்டது.
இந்நிலையில் வெனிசுலா மற்றும் நிகரகுவா ஆகிய நாடுகள் ஸ்னோடெனுக்கு அடைக்கலம் தர தயாராக இருப்பதாக அறிவித்துள்ளன. இரு நாட்டு அதிபர்களும் வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.