போப் 2–ம் ஜான்பாலுக்கு புனிதர் பட்டம்: போப் பிரான்சிஸ் ஒப்புதல்
வாடிகன்சிட்டி: மறைந்த போப் 2ம் ஜான்பாலுக்கு புனிதர் பட்டம் வழங்க போப் பிரான்சிஸ் ஒப்புதல் அளித்துள்ளார்.
கத்தோலிக்க கிறிஸ்தவ வழக்கப்படி மறைந்த பிறகு அதிசயங்கள் நிகழ்த்தும் குருமார்கள் ‘புனிதர்' என அறிவிக்கப்படுவார். அதன்படி மறைந்த போப் 2-ம் ஜான்பாலுக்கு புனிதர் பட்டம் வழங்க வேண்டும் என்று வாடிகன் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்காக அவர் நிகழ்த்தியதாக கூறப்படும் 2 அதிசயங்கள் சுட்டிக்காட்டப் பட்டன.
பக்கவாத நோயினால் பாதிக்கப் பட்டிருந்த கன்னியாஸ்திரி குணமடைந்தது. மற்றொன்று மூளை கட்டியால் பாதிக்கப் பட்டு கடுமையான தலை வலியால் அவதிப்பட்ட புளோரிபெத் மோரா, குணமடைந்த நிகழ்ச்சி சுட்டிக்காட்டப்பட்டது.
கோஸ்டாரிகா நாட்டை சேர்ந்த அவர் இன்னும் ஒரு மாதமே உயிருடன் இருப்பார் என டாக்டர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் குடும்பத்தினர் மறைந்த போப் 2ம் ஜான்பால் படம் முன்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து சிகிச்சை எதுவுமின்றி அவர் குணமடைந்தார்.
இந்த தெய்வீக அதிசயத்தை ஏற்றுக் கொண்டு மறைந்த போப் ஆண்டவர் 2-ம் ஜான்பாலுக்கு புனிதர் பட்டம் அறிவிக்க போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஒப்புதல் அளித்தார்.
இதற்கான நிகழ்ச்சி வருகிற டிசம்பர் 8-ந்தேதி நடக்கிறது. அப்போது மறைந்த மற்றொரு போப் ஆண்டவர் 23-ம் ஜானுக்கும் புனிதர் பட்டம் அறிவிக்கப்பட உள்ளது.