டெல்லியில் ராஜபக்சே தம்பி டேரா... 21 தமிழக மீனவர்களை சிறைப்பிடித்துப் போன இலங்கை கடற்படை
ராமேஸ்வரம்: நேற்றிரவு கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
கடந்த ஒரு மாத காலமாக இலங்கை சிறையில் வாடிய 49 மீனவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப்படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.
அவர்களில் சிலர் மட்டும் இன்னும் சற்று ஆழமாகச் சென்று மீன்பிடித்துள்ளனர். அவ்வாறு மீன் பிடித்துக் கொண்டிருந்த 10 விசைப்படகு மீனவர்களை, நேற்றிரவு ரோந்து சென்ற இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அந்த 10 விசைப்படகுகளில் கிட்டத்தட்ட 21 மீனவர்கள் இருந்ததாகத்தெரிகிறது. அவ்வாறு, கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் மன்னார் கடற்படை முகாமில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இந்திய-இலங்கை மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு தீர்வுகாணப்படும் என பஷில் ராஜபக்சே தெரித்தநிலையில், மீண்டும் இவ்வாறு தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்டிருப்பது, தமிழக மீனவர்களிடையே பெரும் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.