மத்தியில் பெரும் பதவியை பிடிக்க போராடும் தமிழகத்து பெருந்தகை
சென்னை: மத்திய பட்டியல் இனத்தவருக்கான ஆணையத்தின் உறுப்பினர் பதவியை பிடிக்க தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர் போராடி வருகின்றாராம்.
மத்திய பட்டியல் இனத்தவருக்கான ஆணையத்தின் உறுப்பினராக இருந்த பிரியமானவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மரணம் அடைந்துவிட்டாராம்.
இந்த தகவல் அறிந்த தமிழக காங்கிரஸில் உள்ள தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பலர் தங்களது பயோடேட்டாவை தயாரித்து டெல்லிக்கு அனுப்பி வைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார்களாம்.
இந்த ஆணையத்தின் உறுப்பினர் பதவி என்றால் மாநில அமைச்சர் பதவிக்கு நிகரானது. காரில் சிவப்பு விளக்கும், தேசியக் கொடியுமாக வலம் வரலாம். அந்த அளவுக்கு பவர்ஃபுல் பதவியாம்.
அங்கே இங்கே என்று மூன்று நான்கு கட்சிகளுக்குப் போய் இப்போது காங்கிரஸில் சங்கமமாகி இருக்கும் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் பெரும் தகையான ஒருவர் அந்த பதவியை பிடித்தே தீர வேண்டும் என சபதம் போட்டு களத்தில் இறங்கிவிட்டாராம். இதற்காக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களை ஒவ்வொருவராகச் சந்தித்துச் ஆதரவு கோரி வருகின்றாராம்.
ஆனால் இவருக்கு பக்க பலமாகவும், வழிகாட்டியாகவும் இருப்பவர் சிவகங்கையை சேர்ந்த பொருளாதார புலி ஒருவர் தானாம். இதை லேட்டாக உணர்ந்த மற்ற கோஷ்டிகள் பெருந்தகை மீது பெரும் கோபத்தில் உள்ளனராம்.