”பீகாரின் மகள்” இஷ்ரத் ஜஹான்.. ஐ.ஜனதா தளம் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம்!
டெல்லி: குஜராத் மாநிலம் அகமதாபாத் புறநகரில் 2004ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹானை "பீகாரின் மகள்" என்று ஐக்கிய ஜனதா தளம் கூறியிருப்பதற்கு பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
2004ஆம் ஆண்டு மும்பை மாணவி இஷ்ரத் ஜஹான் உட்பட 4 பேரை தீவிரவாதிகள் என்று கூறி குஜராத் போலீசார் சுட்டுக் கொன்றனர். நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த என்கவுன்ட்டர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த வழக்கில் முதலாவது குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்த சிபிஐ, குஜராத் என்கவுன்ட்டரே போலியானது என்று கூறியிருந்தது.
இந்நிலையில் ஐக்கிய ஜனதா தளமோ, இஷ்ரத் ஜஹானை பீகாரின் மகள் என்று உரிமை கொண்டாடி அவருக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என்று கூறியது இன்னொரு சர்ச்சைக்கு வித்திட்டது. ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான அலி அன்வர்தான் இப்படி ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். சுட்டுக் கொல்லப்பட்ட இஷ்ரத்தின் தாத்தா வலி முகமது, பாட்னா அருகே உள்ள ககெளல் என்ற இடத்தைச் சேர்ந்தவர். இஷ்ரத்தின் தந்தை முகமது ஷமிம், பீகாரின் ஜமல்பூரைச் சேர்ந்த ஷமிமா கெளசரை திருமணம் செய்து கொண்டு மகாராஷ்டிராவில் குடியேறிவிட்டனராம். இதனால்தான் இஷ்ரத் ஜஹான் "பீகாரின் மகள்" என்று அலி அன்வர் உரிமை கொண்டாடி, அவரது மரணத்துக்கு நீதி கோருவோம் என்றார்.
இதைக் கடுமையாக விமர்சித்திருக்கும் பாஜக மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத், தீவிரவாதிகளுக்கு மதம், சொந்த ஊர் என்பதெல்லாம் கிடையாது. ஐக்கிய ஜனதா தளம் வாக்கு வங்கி அரசியல் நடத்துகிறது. தீவிரவாதிகள் என சந்தேகிப்போருக்கு புகழாரம் சூட்டக் கூடாது. பீகாரைச் சேர்ந்த ஒருவர் தீவிரவாதியாக இருக்கக் கூடாதா? கடந்த சில ஆண்டுகளாக பீகாரில் தீவிரவாதிகள் தொடர்ந்தும் கைது செய்யப்படுகின்றனரே என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.