மேலதிகாரிகளிடம் அனுசரித்துப் போக வேண்டிய நிலையில் பெண் காவலர்கள்.. மாஜி டிஜிபி திலகவதி
சென்னை: அலுவலகங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்களுக்கு உதவுவதற்காகவும், விசாரணை நடத்துவதற்காகவும் தமிழக அரசு சிறப்புக் குழு ஒன்றை அமைத்துள்ள நிலையில், மேலதிகாரிகளை அனுசரித்துப் போகாத பெண் காவலர்களால் தொடர்ந்து பணியாற்ற முடியாது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் முன்னாள் டிஜிபி திலகவதி.
சமீபத்தில் டிஜிபி சீமா அகர்வால் தலைமையில், ஒரு சிறப்புக் குழுவை தமிழக அரசு அமைத்தது.
பணியிடங்களில் பாலியல் குற்றத்துக்குள்ளாகும் பெண்கள் கொடுக்கும் புகார்களை விசாரிப்பதற்காக இது அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முன்னாள் டிஜிபி திலகவதியின் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அவர் பிபிசிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது...
அனுசரித்தால்தான் நிம்மதி
காவல் துறையில் பணியாற்றும் பெண் காவலர்கள் தங்களது மேலதிகாரிகளை அனுசரித்துச் சென்றால் தான் அவர்கள் தங்களது இல்லற வாழ்க்கையில் நிம்மதியாய் இருக்க முடியும்.
சக ஊழியராகக் கூட பார்ப்பதில்லை
காவல் துறை உயரதிகாரிகள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் பெண் காவலர்களை தங்களது மகளாக, சகோதரியாக குறைந்த பட்சம் சக ஊழியராக கூட மதிப்பதில்லை.
வேறு எதையோ எதிர்பார்க்கிறார்கள்
அதனால் தான் பெண் காவலர்களிடம் அவர்கள் வேறு மாதிரியான பிரதிபலனை எதிர்பார்க்கிறார்கள். இதனால் ஏகப்பட்ட பிரச்னைகள் ஏற்பட்டு, பெண் காவலர்கள் தற்கொலை செய்யப்படும் சம்பவங்கள் தற்போது தமிழக காவல் துறையில் நடந்து கொண்டிருக்கின்றன.
நிறையப் பேர் புகார் கூறினார்கள்
இதுபோன்ற பிரச்னைகளை விசாரிக்கும் இடத்தில் முன்பு நான் இருந்தபோது, பெண் காலவலர்கள் பல பேர், மேலதிகாரிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை முறையிட்டார்கள்.
புகார் தர மறுத்தார்கள்
ஆனால், எழுத்துப்பூர்வமாக புகாராக தரமுடியுமா? என்று கேட்டபோது அவர்கள் அனைவருமே பின் வாங்கி விட்டனர். இதுதான் பல அதிகாரிகளுக்கு சாதகமான விஷயமாகி விடுகிறது.
குறைந்குறைந்தது இடமாற்றம் தேவை
இதுபோன்ற சூழ்நிலைகளில், விசாரணை அதிகாரியாக இருப்பவர்கள், புகாருக்காக காத்துக் கொண்டிருக்காமல் குறைந்தபட்சம் சம்பந்தப்பட்ட அந்த அதிகாரியை வேறு இடத்திற்கு மாற்றி அவரது பணிச்சுமையை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.
கொஞ்சமாவது குறையும்
இதன் மூலம், பெண் காவலர்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள் ஓரளவாவது குறையும் என்று கூறியுள்ளார்.
முன்னாள் டிஜிபியே அதுவும் பெண் டிஜிபியே இவ்வாறு தமிழக பெண் காவலர்களின் நிலை குறித்து பகிரங்கமாக பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.