சேது சமுத்திர போராட்டத்தில் 'கிழவனும், மாங்கொட்டையும்' கதை சொன்ன கருணாநிதி
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி நாகையில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது கருணாநிதி பேசியதாவது,
சேது சமுத்திர திட்டத்தால் எனக்கோ, தம்பி திருமாவளவனுக்கோ இல்லை இங்கிருக்கும் உடன் பிறப்புகளுக்கோ தனிப்பட்ட முறையில் ஏதேனும் உண்டா என்றால் இல்லை. நம் எதிர்காலத்தை மனதில் வைத்து இத்திட்டத்தை நிறைவேற்றக் கோருகிறோம். எதிர்காலம் என்றால் எனக்கு 90 வயது ஆகிறது. 90 வயதிற்கு பிறகும் நம்முடைய வருங்கால சமுதாயம் வாழ நான் கனவு காண வேண்டாமா? இல்லை காண்பது தவறா?
பிள்ளை பருவத்தில் படித்தது நினைவில் இல்லையா? தோட்டத்தில் ஒரு கிழவன் ஒரு மாங்கொட்டையை விதைக்கிறான். அப்போது அருகில் இருந்தவர் ஒருவர் என்ன தாத்தா மாங்கொட்டையை விதைக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அந்த கிழவன் இது செடியாகி, மரமாகும். அதனால் தான் புதைக்கிறேன் என்றார்.
அதற்கு அந்த நபரோ, இது எப்பொது செடியாவது, எப்பொழுது மரமாவது, எப்பொழுது பலன் பெறுவது என்று வேடிக்கையாக கேட்டார். அதற்கு அந்த பெரியவர் கூறுகையில், என் பாட்டன் பூட்டன் புதைத்த மாங்கொட்டைகள் தான் இன்று மரமாகி பூத்துக்குலுங்கி காய்க்கிறது. அதை நான் பறித்து சாப்பிடுகிறேன். நீயும் பறித்து சாப்பிடுகிறாய். அதே போன்று நான் புதைத்துள்ள மாங்கொட்டை எதிர்கால சந்ததியினருக்கு பலன் தரும் என்றார்.
அதே போன்று எனக்கு வயதானாலும், கழகத்தில் உள்ளவர்களுக்கு வயதானாலும் இன்றைக்கு நாம் போராடும் இந்த திட்டம் வருங்கால சந்ததிக்கு பலன் தரும் என்றார் கருணாநிதி.