நீடிக்கும் என்எல்சி ஸ்டிரைக்: நீரில் மூழ்கும் நிலக்கரி சுரங்கங்கள்… மின் உற்பத்தி பாதிப்பு
நெய்வேலி: என்எல்சி தொழிலாளர்களின் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தால், நிலக்கரிச் சுரங்கங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மின் உற்பத்தியும் அடியோடு முடங்கியுள்ளது.
என்.எல்.சியின் 5 சதவிகித பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதை எதிர்த்து, 30000 தொழிலாளர்கள் கடந்த 3ஆம் தேதி இரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்த போராட்டம் ஐந்தாவது நாளாக நீடிப்பதால் அங்கு மின் உற்பத்தி படிப்படியாக குறைந்து வருகிறது.
நீரில் மூழ்கும் அபாயம்
சுரங்கத்தின் நீர்க்கட்டுப்பாடு பிரிவைச் சேர்ந்த தொழில்நுட்ப ஊழியர்களும் நேற்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் நிலக்கரிச் சுரங்கங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் துணை மேலாளர் ஆர். பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நிலக்கரி தட்டுப்பாடு
வேலை நிறுத்தம் காரணமாக மின் உற்பத்தியில் 500 மெகாவாட் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. பாதாள அறைகளில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள பழுப்பு நிலக்கரி இன்னும் நான்கு நாட்களுக்கு மட்டுமே மின்சார உற்பத்தி செய்யப் போதுமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
மின் உற்பத்தி பாதிப்பு
பழுப்பு நிலக்கரி தீர்ந்துவிட்டால் மின்சார உற்பத்தி படிப்படியாக குறைந்து பூஜ்ய அளவை எட்டிவிடும் என்றும் அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஒரு அனல்மின் உலை நிறுத்தப்பட்டால், அதை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர வாரங்கள் பிடிக்கும் எனவே அனல் மின் உலைகள், மின் உற்பத்தியை முற்றிலும் நிறுத்தாமல் இருப்பதற்காக பழுப்பு நிலக்கரி எரிபொருளுக்குப் பதிலாக பர்ன்ஸ் ஆயிலை பயன்படுத்த நெய்வேலி நிலக்கரி நிறுவன நிர்வாகம் முடிவு செய்துள்ளது.