சான்பிரான்சிஸ்கோ விமான விபத்தில் காயத்துடன் உயிர் பிழைத்த 3 இந்தியர்கள்
உயிரிழந்தவர்களில் இந்தியர்கள் யாரும் இல்லை என்று தென் கொரியாவுக்கான இந்தியத் தூதர் வி்ஷ்ணு பிரகாஷ் கூறியுள்ளார்.
சியோல் நகரிலிருந்து கிளம்பிய இந்த விமானம் சான் பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளானது. தரையிறங்கிய சமயத்தில் வால் பகுதி தரையில் தட்டி அப்படியே பிய்த்துக் கொண்டு போய் விழுந்தது. இதையடுத்து விமானத்தின் வயிற்றுப் பகுதி அப்படியே தரையுடன் உரசியபடி விழுந்து தீப்பிடித்துக் கொண்டது.
இந்தக் கோர விபத்தில்2 பேர் உயிரிழந்தனர். 180க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து இந்தியத் தூதர் விஷ்ணு பிரகாஷ் கூறுகையில், விமானத்தில் பயணம் செய்தவர்களில் 3 பேர் இந்தியர்கள். அவர்களில் ஒருவருக்கு கழுத்து எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது. இரண்டு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது என்றார்.
அந்த விமானத்தில் மொத்தம் 291 பயணிகளும், 16 ஊழியர்களும் இருந்தனர். காயமடைந்தவர்களில் 10 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் 77 கொரியர்களும், 141 சீனர்களும், 61 அமெரிக்கர்களும், ஒரு ஜப்பானியரும் இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
லேன்டிங்கை ரத்து செய்ய முயற்சித்த பைலட்டுகள்
இதற்கிடையே, இந்த விபத்து குறித்த புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது லேன்டிங்கில் பிரச்சினை ஏற்படுவதை உணர்ந்த விமானிகள், அதை ரத்து செய்து விட்டு மீண்டும் மேலே கிளம்ப முயற்சித்ததாக தெரிய வந்துள்ளது.
தரையிறங்கும்போது எந்த வேகத்தில் விமானம் பயணிக்க வேண்டுமோ அதை விட குறைவான வேகத்தில்தான் விமானம் வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த விமானிகள் உடனடியாக தரையிறங்குவதை ரத்து செய்ய முடிவெடுத்தனர். ஆனால் அடுத்த சில நொடிகளில் விமானம் விழுந்து விட்டது.
காக்பிட்டில் பதிவான தகவலை வைத்து இந்த தகவலை சொல்லியுள்ளனர் அமெரிக்க விமானத்துறை அதிகாரிகள்.