இந்தோனேசியாவில் புலிகளுக்கு பயந்து 5 பேர் மரத்தின் மேல் 3 நாட்களாக உயிருக்கு போராட்டம்
ஜகர்தா: இந்தோனேசியாவில் புலிகளிடம் இருந்து தப்பிக்க 5 பேர் 3 நாட்களை மரத்திலேயே கழித்துள்ளனர்.
இந்தோனேசியாவின் அசே மாகாணம் சிம்பங்க் கிரியைச் சேர்ந்த 6 பேர் குனுங் லூசர் தேசிய பூங்காவில் உள்ள அடர்த்தியான காடுகளுக்குள் நுழைந்தனர். அவர்கள் வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மரக்கட்டைகளை பொறுக்க காட்டுக்குள் சென்றனர். அப்போது அவர்கள் எதிர்பாராதவிதமாக ஒரு புலிக்குட்டியை கொன்றுவிட்டனர். இதை பார்த்த புலிகள் ஆவேசமடைந்து அவர்களை தாக்க வந்தது.
இதில் ஒருவர் பலியானார். மீதமுள்ள 5 பேரும் ஒரு பெரிய மரத்தின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டனர். அவர்கள் தங்கள் செல்போன் மூலம் தங்களை காப்பாற்றுமாறு தகவல் அனுப்பினர். இதையடுத்து கடந்த சனிக்கிழமை சுமார் 30 பேர் அவர்களை காப்பாற்ற காட்டுக்குள் சென்றனர். அவர்களால் 4 புலிகளை மட்டுமே விரட்ட முடிந்தது.
ஆனால் அவர் இருக்கும் பகுதியை மீட்பு படையினர் அடையவே 2 முதல் 3 நாட்கள் ஆகும். அவர்கள் செல்லும்வரையில் அந்த மரத்திற்கு கீழ் புலிகள் இருந்தால் அவற்றுக்கு மயக்க ஊசி போட்டு தான் அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.