”'Epic TV”..ஆனந்த் மகிந்த்ராவுடன் கை கோர்க்கும் முகேஷ் அம்பானி
Epic TV நிறுவனமானது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதன் தலைவராக இருப்பவர் வால்ட் டிஸ்னி இந்தியாவின் நிர்வாக இயக்குநராக இருந்த மகேஷ் சமத். இந்நிறுவனத்தில் ஆனந்த் மகிந்த்ரா முதலீடு செய்திருப்பதாக கடந்த மாதம் செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியும் இதில் முதலீடு செய்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்நிறுவனத்தின் 48.5% பங்குகள் மகேஷ் சமத் வசமும், தலா 25% பங்குகள் முகேஷ் மற்றும் ஆன்ந்த் வசமும் இருக்கும். தொடக்கத்தில் இருவரும் சுமார் ரூ100 கோடி வரை முதலீடு செய்ய இருக்கின்றனர். முகேஷ் அம்பானி தமது ரிலையன்ஸ் போர்ட்ஸ் அண்ட் டெர்மினல் நிறுவனம் மூலம் முதலீடு செய்கிறார்.
அடுத்த மாதம் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ள இத்தொலைக்காட்சியைப் பார்க்க கட்டணம் செலுத்த வேண்டும். வழக்கமான பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டதாக மட்டுமே இல்லாமல் வித்தியாசமான உள்ளடக்கங்களுடன் எபிக் டிவியை ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டுள்ளனராம். இருப்பினும் ஆனந்த் மகிந்த்ராவோ முகேஷ் அம்பானியோ இத்தொலைக்காட்சியின் நிர்வாகக் குழுவில் இடம்பெறப் போவதில்லையாம். இவர்களது நிறுவனங்களின் பிரதிநிதிகள்தான் இடம்பெறப் போகின்றனராம்..
சி.என்.என்.- ஐபிஎன், சிஎன்பிசி டிவி18, கலர்ஸ் உள்ளிட்டவைகளை ஒளிபரப்பு செய்யும் நெட்வொர்க் 18, டிவி18 பிராட்கேஸ்ட் குழுமத்தில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் முகேஷ் அம்பானி ரூ2 ஆயிரம் கோடி முதலீடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.