இந்தியாவின் பாதுகாப்புக்கு சேது சமுத்திர திட்டம் அவசியம்: டி.ஆர். பாலு
சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி கன்னியாகுமரியில் நேற்று நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் பேசிய டி.ஆர்.பாலு, தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு சேது சமுத்திரத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்று அண்ணா, காமராஜர், கலைஞர் ஆகியோர் கனவு கண்டனர். 150 ஆண்டு காலம் நாம் கண்ட கனவு நிறைவேற வேண்டுமென்று குரல் கொடுத்து வருகிறோம்.
இந்தியாவைச் சுற்றி உள்ள நாடுகளுக்கு சீனா, பாகிஸ்தான் போன்றவை உதவி வருகின்றன. பிற நாடுகளின் எதிர்ப்பை சமாளிக்க நமது நாட்டைச் சுற்றி போர்க் கப்பல்கள் பாதுகாப்புக்கு செல்ல வேண்டும். அதற்கு சேது கால்வாய் அவசியம். இந்தியாவின் பாதுகாப்புக்காக சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றியே தீர வேண்டும். இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் தென்தமிழகம் வளம் கொழிக்கும் பகுதியாக மாறும்.
அமெரிக்கா, எகிப்து போன்ற நாடுகளில் நமக்கு பிறகு தொடங்கப்பட்ட, கடலில் கால்வாய் அமைக்கும் பணிகள் அங்குள்ள மக்களின் எழுச்சி காரணமாக நிறைவேற்றப்பட்டு பணிகளும் முடிந்து விட்டன. ஆனால் இங்கு ராமரின் பெயரை சொல்லி திட்டத்தை நிறைவேற்ற தடை போடுகிறார்கள். ராமர் மீது எங்களுக்கு எந்த வெறுப்பும் இல்லை. இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் மத நம்பிக்கைகளில் தலையிட விரும்பவில்லை.
சேது சமுத்திரக் கால்வாய் அமைய இருக்கும் பகுதி, திருப்புலானி மணல் திட்டு அமைந்திருக்கும் பகுதியில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு கால்வாய் அமைக்க மத்திய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது. மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்த பின்பு அதை மாற்ற இயலாது என்றார்.