திமுகவுக்கு ’தேர்தலில்’ கை கொடுக்குமா சேது சமுத்திர திட்டம்?
சென்னை: லோக்சபா தேர்தலில் சேது சமுத்திர திட்டத்தையும் முன்வைத்து பிரசாரம் செய்யும் நோக்கத்துடனேயே திமுக இவ்விவகாரத்தை கையில் எடுத்து போராடி வருகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
சேது சமுத்திர திட்டம் என்பது தமிழர்களின் நூற்றாண்டுகால கனவு. பாக்ஜலசந்தியையும் மன்னார் வளைகுடாவையும் பிரிக்கும் மணல் திட்டுகளை அகற்றினால் கப்பல் போக்குவரத்துக்கு ஏற்றதாக அப்பகுதி அமைந்துவிடும். இதன் மூலம் இலங்கையை சுற்றிக் கொண்டு நடைபெற்று வரும் கப்பல் போக்குவரத்து இந்திய கடற்பரப்புக்குள்ளே நடைபெறும் என்றும் தென் தமிழகத்தில் புதிய துறைமுகங்கள் உருவாகும் என்பதும் சேது சமுத்திரத்திட்டத்தை ஆதரிக்கும் திமுகவின் கருத்து.
தமிழகத்தில் நாடு விடுதலை அடைந்த பின்னரும் கூட அனைத்து கட்சிகளுமே சேது சமுத்திரத் திட்டத்தை ஆதரித்தே வந்தன. சில ஆண்டுகள் முன்பு வரை கூட அதிமுக, திமுக, மதிமுக, பாமக உள்ளிட்ட அனைத்து கட்சிகளினது தேர்தல் அறிக்கையில் தவறாமல் இடம்பெறக் கூடிய ஒரு விஷயமாக இருந்தே வந்தது சேது சமுத்திர திட்டம். இதனால் ஒட்டுமொத்த தமிழகத்தின் ஒருமித்த குரலாகவே சேது சமுத்திர திட்டம் இருந்து வந்தது. சூழல் ஆர்வர்லர்கள் என்போர் மட்டுமே இந்த சேது சமுத்திர கால்வாய் திட்டத்துக்கு கடும் எதிர்ப்புக் குரல் கொடுத்து வந்தனர்.
ஆனால் தமிழக அரசியலில் இப்போது சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை ஆளும் அதிமுக கடுமையாக எதிர்க்கிறது. மணல் திட்டுகள் எனப்படுகிற ராமர் பாலத்தை இடித்துவிட்டு சேதுக் கால்வாய் திட்டத்தை அமைக்கக் கூடாது என்று போர்க்கொடி தூக்குகிறது அதிமுக. ஆளும் அதிமுக அரசு கடுமையாக எதிர்க்கிறது என்பதாலே என்னவோ அண்மைக்காலமாக சேதுக்கால்வாய் எதிர்ப்புக் குரல்களின் வலுவும் சற்றே பலமாகவே இருக்கிறது. இந்த வலுவான குரலில் மீனவர் அமைப்புகளும் இணைந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில்தான் திமுக சார்பில் சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தூத்துக்குடியில் எதிர்ப்பு போராட்டமும் நடந்தேறியிருக்கிறது. லோக்சபா தேர்தலில் திமுக இந்த விவகாரத்தை முன் வைத்தால் மீனவர்கள் அமைப்பின் துணையுடன் அதிமுக எதிர்கொள்ளும் என்பதையே இது வெளிப்படுத்தியிருக்கிறது.
பொதுவாக சென்னை துறைமுகம், தூத்துக்குடி துறைமுகம் போன்றவை உருவாக்கப்பட்ட காலங்களிலும் கூட மீன்பிடி உரிமை பாதிக்கப்படுகிறது என்று வாதிடப்பட்டது. காலப்போக்கில் அவை ஏற்றுக் கொள்ளப்பட்டவைதான். இதேபோல் சேதுசமுத்திர திட்டமும் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.
பொதுவாகவே தமிழகத்தில் லோக்சபா அல்லது சட்டசபை தேர்தல்களில் ஈழத் தமிழர் பிரச்சனை மையமான ஒரு விஷயமாகிவிடும். தற்போதைய அரசியல் சூழலில் திமுகவுக்கு ஈழத் தமிழர் பிரச்சனை என்பது பெரும் தலைவலியான விஷயம். அதேபோல் காவிரி நதிநீர் பிரச்சனையிலும் கூட தமிழக அரசு உறுதியான நிலைப்பாடுடன் செயல்பட்டு வருகிறது. இதனால் அதிமுகவுக்கு எதிரான ஒற்றை விஷயமாக திமுகவினால் முன்வைக்கப்படக் கூடியதாக இருப்பது சேது சமுத்திர கால்வாய் திட்டம் மட்டுமே. இதையே மெல்ல மெல்ல தேர்தல் கால பிரச்சனையாக மாற்றுவதற்குத்தான் திமுகவும் முயல்கிறது என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது. இதனால்தான் காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர். என அனைத்து தலைவர்களும் ஆதரித்த திட்டம் என்று வலுவான ஒரு பிரச்சாரத்தை முன்வைக்கவும் செய்கிறது திமுக
ஆனால் 'உணர்வுவயப்பட்ட' விஷயங்களில் அதீதமும் ஆதரவும் காட்டும் தமிழக வாக்காளப் பெருங்குடிமக்கள் இதுபோன்ற அறிவுப்பூர்வாஅன விஷயங்களில் எப்படி ஆதரவு காட்டுவார்கள் என்பதும் கேள்விக்குறிதான்! இதனாலேயே சேதுசமுத்திர திட்டம் தேர்தலுக்கு கை கொடுக்குமா? என்ற கேள்வி திமுகவினர் மத்தியிலும் உண்டு..
எறியும் பந்தை எறிந்து பார்க்கிறது திமுக... விக்கெட் விழும் என நம்பிக்கை வரு வரை இந்த பந்து வீச்சும் தொடரவே செய்யும்!