சிபிஐக்கு தன்னாட்சி அளிக்க நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி: சிபிஐக்கு தன்னாட்சி அளிக்க வகை செய்யும் சட்டத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் இயற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
நிலக்கரி சுரங்க முறைகேடு விவகாரத்தில் சிபிஐயின் அறிக்கையை மத்திய சட்ட அமைச்சராக இருந்த அஸ்வனிகுமார் திருத்தினார் என்று புகார் எழுந்தது. இதை உச்சநீதிமன்றத்தில் சிபிஐயும் ஒப்புக் கொண்டது. இதைத் தொடர்ந்து சிபிஐ, கூண்டுக் கிளியாக இருக்கிறது... எஜமானர்கள் சொல்வதையே சிபிஐ பேசுகிறது என்று உச்சநீதிமன்றம் விமர்சனம் செய்தது. அத்துடன் சிபிஐ, சுதந்திரமாக செயல்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அதிரடி காட்டியது.
இதனால் சிபிஐக்கு தன்னாட்சி அளிப்பது தொடர்பாகவும் சிபிஐ இயக்குநர் நியமனம் தொடர்பாகவும் விவாதித்த மத்திய அமைச்சரவை தமது கருத்தை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்தது. மேலும் சுரங்க ஊழல் வழக்கின் தற்போதைய விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்த சிபிஐ, வழக்கின் விசாரணைக்காக சில நேரங்களில் வழக்கு விவரங்களை அரசிடம் பகிர்ந்து கொள்ள வேண்டியதிருக்கிறது என்ற கருத்தையும் தெரிவித்தது. இதன் மீது இன்று விசாரணை நடைபெறும் என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இன்று சிபிஐயின் விசாரணை அறிக்கையை ஆய்வு செய்த நீதிமன்றம், திருப்தி தெரிவித்தது. அதே நேரத்தில் மத்திய அரசுடன் விசாரணை விவரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டியதிருக்கிறது பற்றிய சிபிஐ-ன் கருத்து குறித்து கேள்வி எழுப்பியது. மேலும் சிபிஐக்கு தன்னாட்சி அளிப்பதற்காக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என்றும் இதுபற்றி சிபிஐயின் கருத்து அவசியம் கேட்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அப்படி ஒரு சட்டம் இயற்றப்படாவிட்டால் அதை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.