கேரளாவில் விஸ்வரூபமெடுத்த சோலார் பேனல் மோசடி!: ‘அச்சு’ அருகே விழுந்த கண்ணீர் புகை குண்டு!!
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் சோலார் பேனல் மோசடி விவகாரம் பெரும் விஸ்வபரூம் எடுத்திருக்கிறது. சட்டசபையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் சட்டசபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. சட்டசபைக்கு வெளியே போராட்டம் நடத்திய போது முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் அருகே கண்ணீர்புகை குண்டு விழுந்ததில் அவர் மயக்கமடைந்ததால் பதற்றம் ஏற்பட்டது.
கேரளாவில் சோலார் பேனல் மோசடி விவகாரத்தில் பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முதல்வர் உம்மன்சாண்டி பதவி விலக வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை. ஆனால் தம்மால் பதவியை விட்டு விலக முடியாது என்று அவர் அறிவித்துவிட்டார். இதைத் தொடர்ந்து நேற்று காலை சட்டசபை கூடியபோது எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள், உம்மன்சாண்டி ராஜினாமா செய்ய வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து சட்டசபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் சட்டசபைக்கு வெளியே இடதுசாரிக் கட்சியினரும் எம்.எல்.ஏக்களும் ஒன்று திரண்டு உம்மன்சாண்டி பதவி விலகக் கோரி போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் மீது கற்கள் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தைக் கலைக்க முயற்சித்தனர்.
அப்படி வீசப்பட்ட கண்ணீர் புகை குண்டுகளில் ஒன்று போராட்டத்துக்கு தலைமை வகித்த முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் அருகே விழுந்து வெடித்தது. இதில் சம்பவ இடத்திலேயே அச்சுதானந்தன் மயங்கி விழுந்தார். அவருடன் இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. திவாகரனும் மயக்கம் அடைந்தார். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது. பின்னர் இருவரும் திருவனந்தபுரம் அரசு மருத்துமனையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டனர்.
புகை குண்டை வீசினர். இது அச்சுதானந்துக்கு அருகே விழுந்து வெடித்தது. இதில் அவரும், இநதிய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ திவாகரனும் மயக்கம் அடைந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இருவரும் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
சசிதரூர் அலுவலகம் சூறை
இதனிடையே திருவனந்தபுரத்தில் நேற்றைய போராட்டத்தின் போது மத்திய அமைச்சர் சசி தரூர் அலுவலகத்தை போராட்டாக்காரர்கள் தாக்கியுள்ளனர். அவரது அலுவலகம் முன்பு நின்ற இரு சக்கர வாகனங்கள் நொறுக்கப்பட்டன. அப்போது சசி தரூர் அலுவலகத்தில் இல்லை. மேலும் சிலர் அலுவலகத்துக்குள் உள்ளே நுழைந்தும் பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.