குண்டுவெடித்த புத்தகயா கோவிலில் சோனியா, ஷிண்டே: கைதான 4 பேர் விடுவிப்பு
பாட்னா: புத்தகயாவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடங்களை இன்று சோனியா மற்றும் சுஷில் குமார் ஷிண்டே ஆகியோர் பார்வையிட்டனர். ஏற்கனவே, கைது செய்யப்பட்ட நான்கு பேரை விடுவித்தது மத்திய புலனாய்வுத் துறை
கடந்த ஞாயிறன்று, பீகார் மாநிலம், புத்தகயாவில் உள்ள மகாபோதி ஆலயத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் சம்பந்தப் பட்டவர்கள் தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு என மத்திய புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது. சந்தேகத்தின் பேரில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட 4 பேர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், குண்டு வெடிப்பு நிகழ்ந்த மகாபோதி ஆலயத்திற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே ஆகியோர் இன்று காலை 11 மணியளவில் சென்று பார்வையிட்டனர்.
பின்னர், சுஷில்குமார் ஷிண்டே, உடன் வந்த மத்திய உளவுப்படை மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பின் உயர் அதிகாரிகள் ஆகியோரிடம் விசாரணை முன்னேற்றங்கள் குறித்து கேட்டறிந்தார்.