சம்மனை வாங்க மறுத்த அஞ்சலி: வழக்கு விசாரணை ஆகஸ்ட் 12க்கு தள்ளிவைப்பு
கற்றது தமிழ் படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை அஞ்சலி, சில மாதங்களுக்கு முன்பு திடீரென ஐதராபாத்தில் தான் தக்கியிருந்த ஹோட்டலில் இருந்து மாயமானார். பின்னர், நான்கு நாட்களுக்குப் பிறகு போலீசில் சரணடைந்தார்.
அப்போது, தான் இதுவரை அம்மா என அழைத்த பாரதிதேவி தனது சித்தி என்றும், அவரும் அவரோடு இணைந்து இயக்குநர் களஞ்சியம் தன்னைக் கொடுமைப் படுத்துவதாகவும், தனது சொத்துக்களை அபகரிக்கப் பார்ப்பதாகவும் புகார் கூறினார்.
ஆனால், தன் மீது அஞ்சலி சுமத்திய குற்றச்சாட்டை மறுத்த களஞ்சியம், சைதாப்பேட்டை பெருநகர 17வது கோர்ட்டில் அஞ்சலி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின் போது நடிகை அஞ்சலி நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்ப மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கு விசாரணைக்கு வந்தது.
ஆனால், அஞ்சலி சம்மனை பெற மறுத்து விட்ட நிலையில், வழக்கு மீதான விசாரணை ஆகஸ்ட் 12-ந் தேதிக்கு தள்ளிவைக்கப் பட்டுள்ளது.