தாளிக்க கறிவேப்பிலை கிடைக்கலையே? பிரிட்டன் இந்தியர்கள் கவலை
இந்திய உணவு வகையில் அதிக அளவில் பயன்படக்கூடியது கறிவேப்பிலை. சில மாதங்களுக்கு முன்புவரை பிரிட்டன் கடைகளில் இலவசமாகக் கிடைத்துவந்த கறிவேப்பிலை திடீரென விலை உயர்ந்துள்ளது. சில சமயங்களில் கண்ணில் காணமுடியாத அளவிற்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தில் தற்போது கறிவேப்பிலை கொத்தின் விலை இந்திய மதிப்பில் சுமார் 80 ரூபாய்.
எதனால் இந்த விலை உயர்வு என்று ஆய்வு செய்த போது, வெளிநாடுகளில் இருந்து கறிவேப்பிலை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையே காரணம் என்று கூறுகின்றனர்.
கடந்த பிப்ரவரி மாதம் பிரிட்டனின் நியூ காஸ்டில் நகரில் நடந்த உணவுத் திருவிழா. இதில் 12 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
இதில் கறிவேப்பிலை சட்னி உணவு உள்கொண்ட 400 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதுபற்றி ஆய்வு செய்த, நியூ காஸ்டில் நகர கவுன்சில், " இத்திருவிழாவின் பயன்படுத்தப்பட்ட கறிவேப்பிலையில் பூச்சிக்கொல்லி மருந்தின் உபரி அதிக அளவில் இருந்ததே காரணம்" என்று கூறியுள்ளது. மேலும் பாக்டீரியா தாக்குதலும் அதிகம் காணப்பட்டதாம். எனவே உடனடியாக இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கறிவேப்பிலை இறக்குமதிக்கு தடை விதித்து விட்டனர்.
இதனால் இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியவாழ் மக்கள் கொஞ்சம் தடுமாறித்தான் போய்விட்டனர். தாளிக்க கறிவேப்பிலை இல்லாவிட்டால் எத்தனை சமைத்தாலும் ருசியிருக்காதே என்பதுதான் அவர்களின் கவலை.
தற்போது உகாண்டாவில் இருந்து மட்டுமே கறிவேப்பிலை இறக்குமதி செய்யப்படுகிறது, அதுவும் கடும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஒரு கட்டு 80ரூபாய் என்ன 100 ரூபாய் என்ன கறிவேப்பிலை போட்டு தாளிச்சே ஆகணும் கட்டாயம் வாங்கிட்டு வாங்க என்று ஆர்டர் போட்டுதான் அனுப்புகின்றனர்.