மூளை அறுவை சிகிச்சைக்கு செல்லும் முன்பு உத்தரகண்ட் நிவாரண நிதிக்கு ரித்திக் ரூ.25 லட்சம் நிதி
மும்பை: உத்தரகண்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு பாலிவுட் நடிகர்கள் ஆமீர் கான் மற்றும் ரித்திக் ரோஷன் ஆகியோர் தலா ரூ.25 லட்சம் நிதி வழங்கியுள்ளனர்.
உத்தரகண்ட் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் என்று பலரும் உதவி செய்து வருகின்றனர். நிவாரண நிதிக்கு வசனகர்த்தா ஜாவித் அக்தர், நடிகர் சத்ருகன் சின்ஹா, நடிகை சபானா ஆஸ்மி மற்றும் நடிகர் அனுபம் கேர் ஆகியோர் நிதி அளித்தனர்.
இந்நிலையில் உத்தரகண்ட் நிவாரண நிதிக்கு அளிக்க ஆமீர் கான் நிதி திரட்டினார்.
ஆமீர் ரூ.25 லட்சம்
உத்தரகண்ட் நிவாரண நிதிக்கு ஆமீர் கான் ரூ.25 லட்சம் நிதி அளித்துள்ளார்.
ரித்திக் ரூ.25 லட்சம்
மூளை அறுவை சிகிச்சை செய்து கொள்ள இந்துஜா மருத்துவமனைக்கு செல்லும் முன்பு நிவாரண நிதி திரட்டிய ஆமீர் கானிடம் அளிக்குமாறு ரூ.25 லட்சத்திற்கான காசோலையை தனது உதவியாளரிடம் அளித்துள்ளார் ரித்திக்.
தானம் பற்றி பேசுங்கள்
கஷ்டப்படுகிறவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும். ஒருவர் தான் அளிக்கும் தானம் பற்றி பிறரிடம் தெரிவிக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். வலது கொடுப்பதை இடது கை அறியக்கூடாது என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நாம் அளிக்கும் தானம் பற்றி பிறரிடம் கூறி அவர்களையும் பிறருக்கு உதவுமாறு கூற வேண்டும். நல்ல காரியங்கள் கவனிக்கப்படாமல் போகக் கூடாது. நிவாரண நிதி திரட்டும் ஆமீருக்கு எனது நன்றி என்று ரித்திக் தெரிவித்தார்.
பாலிவுட் ரூ.1 கோடி
உத்தரகண்ட் நிவாரண நிதிக்கு இதுவரை பாலிவுட் நட்சத்திரங்கள் மொத்தம் ரூ.1 கோடி நிதி அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.