அக்டோபருக்குள் 'ஆதார் கார்ட்'... ரொம்ப டவுட்டு தானாம்!
சென்னை: ஆதார் கார்டுகளுக்கான வேலைகள் சென்னையில் சற்று தாமதமாக நடைபெற்று வருவதால், அக்டோபருக்குள் அனைவருக்கும் ஆதார் கார்டு என்ற இலக்கை அடைவது இயலாது என தெரிகிறது.
சென்னையிலேயே சில பகுதிகளில் மட்டும் தான் ஆதார்கார்டுக்கான தகவல் சேகரிப்பு வேலைகள் ஓரளவுக்கு துரிதமாக நடை பெற்று வருகிறது. பிற இடங்களில் தகவல் சேகரிக்கும் வேலைகள் தொய்வுடனே நடை பெற்று வருவதாகத் தெரிகிறது.
முகாம்கள் பற்றிய விளம்பரங்கள், விழிப்புணர்வு இல்லாததே இந்தத் தொய்விற்கு காரணம் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது, பரவாயில்லை....
ராயபுரத்தில் 62.88 % -ம், தண்டையார் பேட்டையில் 56.98%-ம் தான் அதிகபட்சமாக ஆதார் அட்டைக்கான தகவல் சேகரிக்கப்பட்ட இடங்கள்.
என்ன கொடுமை இது...
அடுத்ததாக கோடம்பாக்கத்தில் 38.02%-ம், தேனாம்பேட்டையில் 36.48%-ம், அண்ணா நகரில் 7.705-ம், திரு.வி.க நகரில் 6.99% வேலைகளும் மட்டுமே தகவல் சேகரிக்கப் பட்டுள்ளதாம்.
அடக் கடவுளே...
அம்பத்தூரிலும், அடையாரிலும் இப்போது தான் வேலையையே தொடங்கியுள்ளார்களாம் ஊழியர்கள்.
இயலாத காரியம்...
இந்த நிலை நீடித்தால், அக்டோபருக்குள் சென்னையில் உள்ள அனைவரது தகவல்களையும் ஆதார் அட்டைக்காக சேகரிப்பது இயலாத காரியம் எனத் தெரிகிறது.
ஆதார் எண் இல்லாமல் அவதி...
ஆனால், அதற்குள் ஆதார் அட்டை கேட்டு அரசு சில கட்டாயங்களை விதித்துள்ளதால், பலர் கேஸ் மற்றும் பல மத்திய சலுகைகளைப் பெற முடியாத நிலையில் அவதிப் பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எப்போ மீதி...
சென்னையில் உள்ள 41.54 லட்ச ஜனத் தொகையில், இதுவரை வெறும் 9.22 லட்ச பேருக்கு மட்டுமே ஆதார் அட்டை பதிவு தகவல் சேகரிக்கப் பட்டுள்ளதாக பெயர் தெரிவிக்க விரும்பாத சென்சஸ் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
70%வாது முடிக்க வேண்டும்...
வரும் அக்டோபருக்குள் எழுபது சதவீதம் தகவல்களையாவது சேகரித்து முடிக்க வேண்டும் என்ற ரகசிய இலக்கில் செயல் படுகிறார்களாம் அதிகாரிகள்.
முகாம் பற்றிய தகவல்கள்...
ஆனால், எங்கே எப்போது முகாம்கள் நடக்கிறது எனப் பொதுமக்களுக்கு சரிவர தகவல்கள் தெரிவராமல் போவதே இந்த பணித் தொய்விற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கின்றனர் பொதுமக்கள்.