19 மாவட்டங்களில் 37 உணவு தானிய சேமிப்புக் கிடங்குகள்: ஜெயலலிதா
சென்னை: அறுவடைக்காலங்களில் கொள்முதல் செய்யப்பட்ட உணவு தானியங் களை சேமித்து வைக்க மாநிலம் முழுவதும் நவீன வசதிகளுடன் கூடிய 37 சேமிப்புக் கிடங்குகளை கட்ட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
உற்பத்தி செய்யப்பட்ட உணவு தானியங்களை சேமித்து வைத்திட 6.68 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு வசதி கொண்ட கிடங்குகள் தற்பொழுது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திடம் உள்ளன.
உணவு தானியங்களை சேமித்து வைக்க கூடுதல் சேமிப்புக் கிடங்குகள் அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு 19 மாவட்டங்களில் நவீன வசதியுடன் கூடிய 47 சேமிப்புக் கிடங்குகள் கட்டப்பட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அவற்றுள் தற்பொழுது முதற்கட்டமாக 117 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் நவீன வசதி களுடன் கூடிய 1,46,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 37 சேமிப்புக் கிடங்குகள் கட்டப்பட நிர்வாக ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள் ளார்.
அந்த வகையில், தஞ்சாவூர், கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, நாமக்கல், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருப்பூர், தூத்துக்குடி, திருவள்ளூர், திருச்சி, கரூர், ராமநாதபுரம், ஈரோடு, தருமபுரி, சேலம் மற்றும் வேலூர் ஆகிய 19 மாவட்டங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் நவீன வசதியுடன் கூடிய சேமிப்புக் கிடங்குகள் கட்டுவதற்கு முதல்வர் ஜெயலலிதா நிர்வாக ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளார்.