ரமலான் நோன்பு: வளைகுடா நாடுகளில் நேற்றும், இந்தியாவில் இன்றும் துவக்கம்
துபாய்: துபாய் உள்ளிட்ட வளைகுடாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் ரமலான் நோன்பு துவங்கியது. தமிழகத்தில் இன்று துவங்கியது.
துபாய் உள்ளிட்ட வளைகுடாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் ரமலான் நோன்பு துவங்கியது. இதையொட்டி கடந்த 9ம் தேதி மாலை தராவீஹ் எனும் சிறப்புத் தொழுகை துவங்கியது. துபாயில் தமிழக முஸ்லிம்கள் அதிகம் இருந்து வரும் தேரா குவைத் பள்ளி, கோட்டைப் பள்ளி, அஸ்கான் டி பிளாக் உள்ளிட்ட இடங்களில் நடந்த சிறப்புத் தொழுகைகளில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இவ்வருடம் கடுமையாக வெயில் இருந்து வருகிறது. எனினும் இறைக்கடமையினை நிறைவேற்ற அனைவரும் நோன்பினை கடைபிடித்து வருகின்றனர்.
தமிழக மக்கள் விரும்பி அருந்தும் நோன்புக் கஞ்சியினை துபாய் தேரா பகுதியில் அமைந்துள்ள குவைத் பள்ளி மற்றும் இரண்டு பள்ளிகளில் ஈமான் அமைப்பு 3,500க்கும் மேற்பட்டோருக்கு தினமும் வழங்கி வருகிறது. இதற்காக ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் குத்தாலம் ஏ லியாக்கத் அலி தலைமையில் துணைப் பொதுச் செயலாளர் ஏ முஹம்மது தாஹா, மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்ட குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் ரமலான் நோன்பு இன்று துவங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.