புகுஷிமா அணு உலை தலைமை அதிகாரி மசாவோ யோஷிடா புற்று நோயால் மரணம்
புகுஷிமா அணு உலை தலைமை அதிகாரியாக பணியாற்றிய மசாவோ யோஷிடா, கடந்த சில ஆண்டுகளாகவே புற்று நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தார். தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பயனின்றி அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 58.
இதையொட்டி அணு உலை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், புற்று நோய்க்கும், யோஷிடா புரிந்த பணிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டில் ஜப்பான் நாட்டை உலுக்கிய பூகம்பம், சுனாமியால், புகுஷிமாவில் உள்ள அணு உலை பெரிதும் பாதிக்கப்பட்டது. அப்போது அணு உலையில் தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்தவர் மசாவோ யோஷிடா.
சுனாமியின்போது அணு உலையை சீரமைப்பதற்காக தனது உயிரையும் பொருட்படுத்தாமல், துணிச்சலான நடவடிக்கையால் மிகப்பெரிய பேரழிவு தடுத்தவர் யோஷிடா. அணுஉலை தலைமை நிர்வாக அதிகாரி ஒருவர் புற்றுநோய் தாக்கி மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியலைகளை உருவாக்கியுள்ளது.