ஆள் கடத்தல் வழக்கு: கலிபோர்னியாவில் செளதி இளவரசி கைது
செளதி இளவரசி மெஷீல் அலய்பான் (42). அவர் கலிபோர்னியாவுக்கு தனது குடும்பத்துடன் வந்திருந்தார். அப்போது அவருடன் வந்த 30 வயது கென்யாவைச் சேர்ந்த பெண் ஒருவர் கையில் சூட்கேஸுடன் ஒரு பேருந்தை மறித்துள்ளார். பஸ் பயணிகளிடம் தன்னை செளதி இளவரசி விருப்பத்திற்கு எதிராக அடைத்து வைத்திருந்ததாகத் தெரிவித்தார்.
உடனே சக பயணிகள் அப்பெண்ணை போலீசாரிடம் அழைத்துச் சென்றனர். போலீசார் ஆள் கடத்தல் வழக்குப் பதிவு செய்து இளவரசியை கைது செய்தனர். அப்பெண் கடந்த 2012ம் ஆண்டு செளதி இளவரசியால் வேலைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.
அவர் செளதி அரேபியாவுக்கு வந்த உடனே அவரது பாஸ்போர்ட்டை பறித்துக் கொண்டுள்ளனர். மேலும் குறைவான ஊதியம் வழங்கி பல மணிநேரம் வேலை வாங்கியுள்ளனர். அப்பெண் எங்கும் செல்லவும் அனுமதிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இளவரசிக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி அவர் 5 மில்லியன் டாலர் தொகையை செலுத்துவிட்டு செல்லுமாறு உத்தரவிட்டார். மேலும் அவரை 24 மணிநேரமும் கண்காணிக்க அவரது கையில் ஜிபிஎஸ் வளையம் போட்டுவிடுமாறு நீதிபதி உத்தரவிட்டார். இளவரசி நாட்டை விட்டு வெளியேறவும் நீதிபதி தடை விதித்துள்ளார்.
வேலைக்கார பெண்ணுக்கு மாத சம்பளமாக ரூ.95,268 பேசப்பட்டுள்ளது. ஆனால் கென்ய பெண்ணிடம் எப்பொழுதும் வேலை வாங்கிவிட்டு மாதா மாதம் வெறும் ரூ. 11,908 கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்தது.