திவ்யாவை நக்சல்கள் கடத்த திட்டம்? :மூன்றடுக்குப் பாதுகாப்பு
தர்மபுரியில் காதல், கலப்பு திருமணம் செய்த இளவரசன் கடந்த 4ஆம் தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து அவரது மனைவி திவ்யாவுக்கு பாதுகாப்பு அளிக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. திவ்யா தனது தாய் தேன்மொழி, தம்பி மணி ஆகியோருடன் செல்லங்கொட்டாய் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். அவரது வீட்டு முன்பு போலீசார் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் திவ்யாவை கடத்த சதி நடப்பதாக தகவல் பரவியதால் தர்மபுரியில் பரபரப்பு ஏற்பட்டது. அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த வகையில் நக்சலைட்டுகள் திட்டமிட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து திவ்யாவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. திவ்யாவின் வீட்டிற்கு செல்லும் வழி எங்கும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அன்னிய நபர்கள் யாரும் அங்கு செல்ல முடியாத அளவிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்திவேல் தலைமையில் 80 போலீசார் அவரது வீட்டுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இதனால் செல்லங்கொட்டாய் கிராமம் முழுவதும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.