இழந்து போன உறவுகளைத் தவிர அனைத்தையும் வழங்குவோம்: ராஜபக்சே
கொழும்பு: போரில் தமிழர்கள் இழந்த உறவுகளைத் தவிர மற்ற அனைத்தையும் தமது அரசு வழங்கும் என இலங்கை அதிபர் ராஜபக்ஷே அந்நாட்டு தமிழர்களிடம் உறுதியளித்துள்ளார். அதற்கு மாற்றாக நாட்டை துண்டாடாமல் நட்புடன் அனைவரும் ஒருங்கிணைந்து வாழ வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட, வடக்குப் பகுதி தமிழர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் ராஜபக்ஷே கலந்து கொண்டு உரையாற்றினார்.
மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இந்நிகழ்வில் தமக்கான நிவாரணங்களை பெற்றுக்கொண்டனர். அப்போது ராஜபக்சே பேசியதாவது, "சுயநல அரசியல் மற்றும் பிரிவினைவாதத்துக்கு இடமளிக்காமல் சகல மக்களும் ஒன்றாக இணைந்து வாழும் நாடாக இந்த நாடு கட்டியெழுப்பப்படவேண்டும்.
வடக்குப் பகுதி மக்களின் அபிவிருத்திக்கான நடவடிக்கைகளும், மக்களின் வாழ்வை மேம்படுத்தும் திட்டங்களும் எவரது நிர்ப்பந்தத்தின் பேரிலும் மேற்கொள்ளப்படவில்லை. சகல உரிமையும் பெற்று ஜனநாயக ரீதியில் சகல மக்களும் வாழவேண்டும் என்பதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளே இவை.
மனித மனங்கள் வென்றெடுக்கப்பட வேண்டும். இதன் காரணமாகவே சரணடைந்த முன்னாள் புலி உறுப்பினர்களில் 99 சதவீதமானோரை சமூகமயப்படுத்தியுள்ளோம். இந்த நாட்டைத் துண்டாட முடியாது இது அயல் நாடுகளைப் போன்று விசாலமான நாடு அல்ல. சிறிய நாடு, எல்லாப் பிரதேசங்களிலும் உறவுகள் வாழ்கின்றன. சகலரும் ஒன்றாக வாழக்கூடிய நாடாகவே இந்த நாடு கட்டியெழுப்பப்பட வேண்டும்
தமிழ் மக்களை தவறான வழியில் நடத்தி ஏமாற்ற நினைப்போரை நம்பக்கூடாது. அத்தகையோரின் பிள்ளைகள் வெளிநாடுகளில் சொகுசாக வாழ்கின்றனர். அவர்களது சொத்துக்கள் குடும்பங்கள் அனைத்துமே கனடா, லண்டன், ஆஸ்திரேலியாவில் உள்ளன.
இத்தகையோர் குறுகிய அரசியலைக் கைவிட்டு பரந்த நோக்குடன் சிந்தித்துச் செயற்பட வேண்டியது முக்கியம்" என அவர் தெரிவித்தார்.