யாழில் புத்த கண்காட்சி நடத்த அழைப்பு- எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் கொந்தளிப்பு!
சென்னை: இலங்கையின் யாழ்ப்பாணத்தில் புத்த கண்காட்சியில் பங்கேற்க வருமாறு தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இது தமிழக எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் மிகப் பிரம்மாண்டமாக புத்த கண்காட்சிகளை நடத்தி வருகிறது பபாசி எனப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம். இந்த சங்கத்துக்கு இலங்கை யாழ்ப்பாண மாவட்ட அரசு நிர்வாகம் மற்றும் இந்திய துணை தூதரகத்திடம் ஒரு கடிதம் வந்துள்ளது. அக்கடிதத்தில் யாழ்ப்பாணத்தில் புத்த கண்காகட்சியில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
இலங்கை அரசும் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தாவும் இணைந்துதான் இந்த புத்த கண்காட்சியை நடத்த அழைப்பு விடுத்திருப்பது தமிழக எழுத்தாளர்கள், பதிப்பாளர்களிடையே கொந்தளிப்பை உருவாக்கி இருக்கிறது. இந்த கண்காட்சியில் கலந்து கொள்வதா? இல்லையா? என்பது பற்றி வரும் 23-ந் தேதி பதிப்பாளர் சங்கம் சென்னையில் கூடி முடிவெடுக்க இருக்கிறது.