தனியே, தன்னந்தனியே... கடல்சுற்றுப்பயணம் மேற்கொண்ட 70வயது சாதனைப் பாட்டி
லண்டன்: கடல் வழியாக தனியே உலகை சுற்றிவந்தப் பெண் என்ற பெருமையை இங்கிலாந்தை சேர்ந்த 70 வயது பெண் பெற்றுள்ளார்.
மேற்கு லண்டனை சேர்ந்தவரான ஜியேன் சாக்ரட்டீஸ்க்கு தற்போது எழுபது வயதாகிறது. இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கனடாவில் உள்ள விக்டோரியா துறைமுகத்தில் இருந்து தனது கடல் சாகச சுற்றுப் பயணத்தை தொடங்கினார்.
சில மாதங்களுக்கு முன், இவர் தனது கடல் பயணத்தில் ஒரு பகுதியாக தமிழகத்தின் சில பகுதிகளுக்கும் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தனியே... தன்னந்தனியே...
இதற்கு முன் கணவருடன் பலமுறை கடல் பயணம் மேற்கொண்டிருந்த போதும், கணவரின் மறைவுக்குப் பிறகு ஜியேனின் தனி முதல் சாகசப் பயணம் இது தான். கிட்டத்தட்ட கடல் மார்க்கமாக இவர் சுற்றி வந்த தொலைவு 25 ஆயிரம் மைல்கள். இதற்கு இவர் எடுத்துக் கொண்ட காலம் 259 நாட்கள் ஆகும்.
பெருமை மிகு பெண்மணி...
இந்தப் பயணம் மூலம், முதலில் கடல் வழியாக தன்னந்தனியாக உலகை சுற்றிவந்த அதிக வயதான பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஜியேன்.
3வது முறை வெற்றிக்கனி...
இதற்கு முன்னர், அதாவது 2009ம் ஆண்டு இவர் தொடங்கிய சாகசப் பயணம் தென் ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட படகு கோளாறினால் தடை பட்டது குறிப்பிடத்தக்கது. மீண்டும்,2010-ம் ஆண்டு அடுத்த முயற்சியில் இறங்கினார். ஆனால், அப்போதும் கடல் பயணத்தின் 72-வது நாள் படகு விபத்துக்குள்ளாகி சோதனை தடைபட்டது. ஆனால் விடாமுயற்சியோடு போராடிய ஜியேன் இம்முறை வெற்றிக் கனியைப் பறித்து விட்டார்.
நிதி திரட்டும் முயற்சி...
ஜியேனின் இந்த சாகசப் பயணத்தின் நோக்கமே, 2003-ம் ஆண்டு புற்று நோயால் மரணமடைந்த தனது கணவரின் நினைவாக மேரி கியூரி புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு நிதி திரட்டி தருவது தான்.