இளவரசன் உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் இறுதி அஞ்சலி- உடல் அடக்கம்
இளவரசன் மர்மமான முறையில் தர்மபுரி அரசு கல்லூரி பின்புறம் உள்ள தண்டவாளத்தில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவர் கொல்லப்பட்டிருப்பதாக சந்தேகங்கள் கிளப்பட்டன.
மேலும் முதலாவது பிரேதப் பரிசோதனை குறித்தும் அவரது பெற்றோர் தரப்பில் பல சந்தேகங்கள் கிளப்பப்பட்டன. இதையடுத்து மறு பிரேதப் பரிசோதனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.அதன்படி டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு 2வது பிரேதப் பரிசோதனையை நேற்று நடத்தியது. இதைத் தொடர்ந்து உடல் இளவரசனின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
உடலைப் பெற்ற குடும்பத்தினர் சொந்த ஊரான நத்தம் காலனிக்கு புறப்பட்டனர். இளவரசன் உடல் அரசின் இலவச ஆம்புலன்ஸ் மூலம் அவர்களது சொந்த ஊரான நத்தம் காலனிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு வீட்டு முன்பு சிறிய பந்தல் அமைக்கப்பட்டு உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு வைக்கப்பட்டது.
சவப்பெட்டி அருகே இளவரசனின் பெரிய உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. உறவினர்கள், நண்பர்கள், நத்தம் காலனி மக்கள், இளவரசனுடன் படித்த பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
நாயக்கன் கொட்டாயில் இருந்து நத்தம் காலனிக்கு வரும் வழியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு பின்புறம் 30 சென்ட் நிலம் வாங்கப்பட்டு உள்ளது. இந்த இடத்தில்தான் இளவரசன் உடல் அடக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இளவரசன் உடல் அடக்கம் நடைபெறுவதை யொட்டி நத்தம் காலனியில் தர்மபுரி எஸ்.பி அஸ்ரா கார்க், கிருஷ்ணகிரி எஸ்.பி. சக்திவேல் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அந்த காலனிக்கு வர வழி உள்ள இரண்டு பாதையிலும் போலீசார் செக்போஸ்ட் அமைத்திருந்தனர். தர்மபுரியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் பாதையிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இளவரசன் உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.
இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர் எம்.எல்.ஏக்கள் பாலபாரதி, ரவிக்குமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.