மாபெரும் மன்னனாக திகழ்ந்த ராவணன்... மண்டோதரியின் துரோகத்தால் ராமரிடம் வீழ்ந்தான்!
டெல்லி: வில்லனாக சித்தரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இலங்கையின் மாமன்னன் ராவணன், மிகச் சிறந்த அரசனாக திகழ்ந்ததாகவும், ராமரிடம் கூட அவன் தோல்வியுற்றிருக்க மாட்டான். ஆனால் மனைவி மண்டோதரியும், சகோதரன் விபீஷணனும், அவனது போர் உபாயங்களை ராமரிடம் போட்டுக் கொடுத்ததால்தான் தோற்றான் என்றும் புதிய நூல் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமாயண நாயகனாக ராமர் சித்தரிக்கப்பட்டாலும் கூட ராவணனின் சிறப்புகளையும், அவனது ராஜ திறமையையும் யாரும் குறைத்து மதிப்பிட முடியாது.
தற்போது ராவணன் மாபெரும் சிறந்த மன்னனாக திகழ்ந்தான். தோல்வியே அறியாதவன் ராவணன். ஆனால் ராமரிடம் அவன் தோற்றதற்கு முக்கியக் காரணம் அவனது மனைவி மண்டோதரியும், தம்பி விபீஷணனும், ராவணனின் போர்த் தந்திரங்களை ராமருக்கு காட்டிக் கொடுத்ததால்தான் என்று புதிய நூல் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் மட்டும் இப்படிச் செய்யாமல் இருந்திருந்தால் நிச்சயம் ராமரையும், ராவணன் வீழ்த்தியிருப்பான் என்றும் அந்த நூல் கூறுகிறது.
சிங்கள நூல்
மிராண்டோ உபயசேகரா என்ற சிங்கள எழுத்தாளர் ராவணா, கிங் ஆப் லங்கா என்ற நூலை எழுதியுள்ளார். அதில்தான் ராவணனை வெகுவாகப் புகழ்ந்துள்ளார்.
மாபெரும் மன்னன்
அதில், ராவணன் இலங்கையின் பெரும்பகுதியை ஆண்ட மாபெரும் மன்னனாக திகழ்ந்துள்ளான். மிகச் சிறந்த எழுத்தாளனாக திழ்ந்துள்ளான். நிறையநூல்களை எழுதியுள்ளான். தனது நாட்டில் பல சுரங்கப் பாதைகளை அமைத்து போர்க் கலையிலும் மன்னனாக திகழ்ந்தவன் ராவணன்.
பிறன் மனைவியைக் கவர்ந்ததால் வீழ்ந்தான்
ஆனால் ராமரின் மனைவி சீதையைக் கவர்ந்து வந்து சிறை வைத்ததால் வீழ்ந்தான் ராவணன்.
மண்டோதரி செய்த துரோகம்
ராமருக்கு எதிரான போரிலும் கூட ராவணனே வென்றிருப்பான். காரணம், போரில் அவனைத் தோற்கடிப்பது சாதாரண விஷயமல்ல. ஆனால் மனைவி மண்டோதரியும், தம்பி விபீஷணனும் சேர்ந்து செய்த துரோகத்தால்தான் ராவணன் தோற்க நேரிட்டது.
போர்த் தந்திரங்களை போட்டுக் கொடுத்தனர்
மண்டோதரியும், விபீஷணனும் ராமர் பக்கம் சாய்ந்து, ராவணனின் போர்த் தந்திரங்களைச் சொல்லிக் கொடுத்ததால்தான் ராவணன் தோற்க நேரிட்டது.
விபீஷணனை மணந்த மண்டோதரி
மண்டோதரி, விபீஷணனின் சதியால், ராவணன் வீழ்த்தப்பட்டான். அதன் பின்னர் ராமரின் அறிவுரைப்படி மண்டோதரியை, விபீஷணன் மணந்தான் என்று ராமாயனம் கூறுகிறது.
மிகப் பெரிய சாம்ராஜ்யம்
ராவணன் வைத்திருந்த சாம்ராஜ்யம் மிகப் பெரியது. இன்றைய நுவரேலியா, பதுல்லா, பொலனருவா, அனுராதபுரா, கண்டி, மொனரகுலா, மாத்தளை, சிலாவ் ஆகிய பிரதேசங்களையும் ராவணன் கட்டியாண்டான்.
மேம்பட்ட நாகரீகம்
ராவணன் மிகுந்த நாகரீகம் மிகுந்தவனாகவும் இருந்தான். சிறந்த கலாச்சாரத்தை உடையதாக தனது நாட்டை வைத்திருந்தான். ஆனால் ராமரின் படையெடுப்பால் அந்த நாகரீகமும், கலாச்சாரமும் அழிந்து போனதாக தனது நூலில் கூறுகிறார் உபயசேகரா.
சிகிரியாவில் வாசம் செய்த ராவணன்
கொழும்பிலிருந்து 170 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிகிரியாவில்தான் ராவணன் வசித்து வந்துள்ளான். மிகவும் புத்திசாலித்தனமும், அறிவும் மிக்க யக்ஷா பழங்குடியைச் சேர்ந்தவன் ராவணன்.
ராவணன் பெயரில் ஊர்கள்
ராவணன் மீதுள்ள அன்பின் காரணமாக இலங்கையின் பல ஊர்களுக்கு அவனது பெயர் சூட்டப்பட்டிருந்தது. ராவண எல்லா, ராவணா கோட்டை, ராவணா கண்டா, ராவணா தேஷ் என அவை பல இடங்களில் இருந்தன.
கண்டிப் பிரதேசத்திலும் ராவண ராஜ்ஜியம்
கண்டி சாம்ராஜ்யத்திற்குட்பட்ட பகுதிகளில் அவனது பெயரில் உதுராவணா மற்றும் யதி ராவணா என இரு ஊர்களுக்கு அவனது பெயர்களே சூட்டப்பட்டிருந்தன.
அனுராதபுரத்தில் பெற்றோருக்கு கோவில்
அனுராதபுரத்தில் தனது பெற்றோர் நினைவாக கோவில் கட்டி வழிபட்டவன் ராவணன். இந்தக் கோவிலை போர்ச்சுகீசியர்கள் படையெடுப்பின்போது இடித்துத் தள்ளி விட்டனர்.
ராமர் ராமர் மரியாதைக்குரியவர்
இதே நூலில் ராமரையும் புகழ்ந்துள்ளார் உபயசேகரா. அதில், ராமர் மரியாதைத்குரியவராக, கண்ணியம் மிக்கவராக இருந்துள்ளார். ராவணன் மாதிரி படை பலத்தைக் கொண்டவராக அப்போது ராமர் இல்லை. மேலும் பெரும் பணக்காரராகவும் அவர் அப்போது இல்லை. உண்மையே வெல்லும் என்ற மிகப் பெரிய நம்பிக்கை மட்டுமே அவரிடம் இருந்தது. இதுவே அவரது வெற்றிக்குக் காரணம்.
ஆனால் சகலகலாவல்லவன் ராவணன்
ஆனால் மறுபக்கம் மாபெரும் வீரனாக, மிகப் பெரிய படைகளுடன் கூடியவனாக, செல்வம், செல்வாக்கு மிக்கவனாக ராவணன் திகழ்ந்துள்ளான். சகல திறமைகளையும் பெற்ற வல்லவனாக திகழ்ந்தான் ராவணன்.
மாவீரன்
வீரர்களில் இவன் மாவீரனாக திகழ்ந்தான். ஜோதிடத்தில் நிபுணனாக இருந்தான். அறிவாளிகளில் மேம்பட்ட அறிவாளியாக திகழ்ந்தான். மருத்துவம் தெரிந்த வித்தகனும் கூட. மாபெரும் இசைக் கலைஞனாகவும் திகழ்ந்தவன் ராவணன்.
ராவணனின் கொடியே இலங்கையின் முதல் கொடி
ராவணன் வைத்திருந்த கொடிதான் இலங்கையின் முதல் கொடி என்பது உபயசேகராவின் கூற்று.
சிறந்த கட்டடக் கலை
ராவணன் காலத்தில் கட்டடக் கலை சிறந்து விளங்கியது. மரத்தால் ஆன பல கட்டடங்களை அக்காலத்தில் எழுப்பினார்களாம். எங்கு பார்த்தாலும் அப்போது மர வீடுகள்தானாம். இதனால்தான் ஹனுமனால் எளிதாக இலங்கையை தீவைத்து எரிக்க முடிந்ததாம்.
போரில் சாகவில்லை ராவணன்
ராமருடன் நடந்த போரின்போது ராவணன் போரில் உயிர் துறக்கவில்லை. மாறாக, விஷம் தடவிய அம்பு அவன் மீது பாய்ந்தால் அவன் மயக்கமடைந்தான்.
தலைக்கவசம் பொருத்திய முதல் வீரர்கள்
ராவணனின் படையில் இருந்த வீரர்கள்தான் உலகிலேயே தலைக் கவசம் பொருத்தி போரில் ஈடுபட்ட முதல் வீரர்கள் ஆவர்.
உயிரோடு புதைத்து விடுவான்
ராவணன் காலத்தில் குற்றம் இழைத்தவர்களுக்கு கொடூரமான தண்டனை தரப்பட்டது. அதாவது உயிரோடு வைத்துப் புதைத்து விடுவார்களாம்.
வெடிகுண்டுகளில் பாம்பு விஷம்
அதேபோல ராவணன் படையினர் பயன்படுத்திய வெடிகுண்டுகளில் நல்ல பாம்பின் விஷம் கலந்திருக்குமாம்.