இளவரசன் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.1 கோடி வழங்க வேண்டும்: சிவகாமி கோரிக்கை
தர்மபுரி மாவட்டம், நத்தம் காலனியில் வசித்து வந்த இளவரசன் திவ்யாவை கலப்பு திருமணம் செய்தார். இந்நிலையில் அவர் தர்மபுரி அரசு கலைக்கல்லூரிக்கு பின்புறம் உள்ள ரயில் தண்டவாளம் அருகே பிணமாக கிடந்தார். இதனால் தர்மபுரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இளவரசனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் அவரது சொந்த ஊரில் அவரது வீட்டின் முன்பு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக இளவரசனின் உடல் நேற்று வைக்கப்பட்டிருந்தது. தர்மபுரி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு இருந்ததால் அரசியல் கட்சி தலைவர்கள், சமூக இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் இளவரசனின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த தடையை மீறி சமூக சமத்துவப்படை நிறுவன தலைவர் சிவகாமி இளவரசன் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், இளவரசனின் பெற்றோர் இளங்கோ, கிருஷ்ணவேணி ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தலித் மக்கள் ஒன்று சேரக் கூடாது என்பதற்காக போலீசார், மாவட்ட நிர்வாகம் அனைத்தும் ஒன்று சேர்ந்து தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்துகின்றது. இளவரசனுக்கு போதிய பாதுகாப்பு கொடுக்காததே, அவரது இறப்புக்கு காரணம் ஆகும். நான், இளவரசன் உடலுக்கு வீர வணக்கம் செலுத்தவும், அவரது பெற்றோர், உறவினர்களுக்கு ஆறுதல் கூறவும் வந்துள்ளேன். இதை அரசியலாக்க விரும்பவில்லை.
உயிர் விலை மதிப்பில்லாதது. இளவரசனை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு அரசு சார்பில் ரூ 1 கோடி வழங்க வேண்டும். இளவரசன் குடும்பத்தினருக்கும், கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர்களுக்கும், சமூக சமத்துவப்படை சார்பில் உரிய உதவிகள் செய்யப்படும். எனக்காக, இந்த மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை தடுக்கவும், தேவையற்ற பிரச்சனைகளை தடுக்கவும், நானே கைதாகி செல்கிறேன் என்றார்.