’இத்தாலி பாசிஸ்டுகள்’.... ட்விட்டர் கருத்தால் சர்ச்சையில் சிக்கிய சசி தரூர்!
டெல்லி: சொந்தக் காசில் சூன்யம் வைத்துக் கொள்வது என்பது மத்திய அமைச்சர் சசி தரூருக்கு ரொம்பவே பொருந்துகிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரை விமர்சிக்கிறேன் என்று சொல்லப் போய் அதுவே இப்போது விஸ்வரூப விவகாரமாகி இருக்கிறது.
கடந்த சில நாட்களாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் விமர்சனத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தம் பங்குக்கு ட்விட்டரில் மோடியை விமர்சித்திருக்கிறார் சசி தரூர். அப்படியான ஒரு பதிவில், என்னைப் பொறுத்தவரையில் முகமூடி போட்டிருக்கும் மதச்சார்பின்மை என்பது இத்தாலி பாசிஸ்டுகளால் ஈர்க்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். காக்கி கால்சட்டைகளை விட நல்லதே. அவர் (மோடி) ஒரு ஆர்.எஸ்.எஸ். பிரசாரகர் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அவ்ளோதான் அனைத்து தரப்பிலிருந்தும் பதில் பதிவுகள் குவிந்துபோய் கிடக்கிறது சசி தரூர் ட்விட்டர் பக்கத்தில்!
மூத்த பத்திரிகையாளர் காஞ்சன் குப்தாவோ, அப்படியானால் நேரு அணிந்திருக்கும் கறுப்பு கால்சட்டையும்கூட இத்தாலி கறுப்பு சட்டையினரால் ஈர்க்கப்பட்டதுதானா? என்று கேள்வி எழுப்பி நேரு கால்சட்டை அணிந்த புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறார்.
மேலும் சிலர், சீக்கிரமாக இந்த கருத்தை யாராவது பார்க்கிறதுக்கு முன்னாடி நீக்கிடுங்க என்றும், ஒருசிலர் ஆமாம்.. இத்தாலியர்கள் பாசிஸ்டுகள் என்றும் பதில் பதிவிட்டிருக்கிறார்கள்..
இத்தாலியோடு உறவுள்ளவர்கள் கட்சியில்தான் சசிதரூர் இருக்கிறார்.. இன்னமும் இருக்கிறார்!!