சிறுநீரக மோசடி: 30 தனியார் மருத்துவமனைகளுக்கு சிபிசிஐடி நோட்டீஸ்!
சென்னை: சிறுநீரக மோசடி தொடர்பாக 30 தனியார் மருத்துவமனைக்கு சிபிசிஐடி போலீசார் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளனர்.
தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் அம்பலமான சிறுநீரக மோசடி சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மோசடி தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில்தான் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் தனியார் மருத்துவமனைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து 30 தனியார் மருத்துவமனைகளுக்கு சிபிசிஐடி போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளிலும் தற்போதும் அந்த மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.
இதில் சென்னையை சேர்ந்த 20 மருத்துவமனைகள், கோவை, சேலத்தில் தலா 4 மருத்துவமனைகள், மதுரையில் 2 மருத்துவமனைகள் அடங்கும்.