தமிழில் வாதாடிய வழக்கறிஞர்...மனு தள்ளுபடி செய்த நீதிபதி: மீண்டும் விசாரணைக்கு ஏற்றது நீதிமன்றம்
மதுரை: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழில் வாதாடியதால் தள்ளுபடி செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் மீண்டும் விசாரணைக்கு ஏற்றது.
வழக்கறிஞர்கள் தமிழில் வாதாட வாய்மொழி அனுமதி வழங்கியிருந்தது உயர்நீதிமன்றம். அந்த அனுமதியின் பேரில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பல வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடி வந்தார்கள். நாளடைவில் தமிழில் வாதாடுபவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
இந்த நிலையில், கடந்த 11ஆம் தேதி ஒரு வழக்கில் ஆஜரான தமிழ் ஆர்வலரும், வழக்கறிஞருமான பகத்சிங் தமிழில் வாதாடினார். நீதிபதி மணிக்குமார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
"உயர்நீதிமன்ற அலுவல் மொழி ஆங்கிலம் தான். அதில் வாதாடுங்கள் " என்று நீதிபதி கூறினார். ஆனால், பகத் சிங் அதனை ஏற்காமல் தொடர்ந்து தமிழில் வாதாட முற்பட்டதால், அந்த வழக்கையை தள்ளுபடி செய்தார் நீதிபதி.
அதேபோல், வழக்கறிஞர் பகத் சிங் ஆஜரான மற்றொரு வழக்கையும் தள்ளுபடி செய்தார் நீதிபதி மணிக்குமார். இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்ற பதிவாளரிம் புகார் செய்யப்பட்டது. வழக்கின் தன்மைக்குள்ளேயே போகாமல், தமிழில் வாதாடியதற்காக அதனை தள்ளுபடி செய்வது சரியல்ல என்று போராடத் தயாரானார்கள் வழக்கறிஞர்கள்.
இதனை தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்ட இரண்டு வழக்குகளையும் இன்று (16.07.13) மீண்டும் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார் நீதிபதி மணிக்குமார். ஆனால், வழக்கறிஞர் பகத்சிங் இன்று ஆஜராகாததால் அந்த வழக்குகள் மீதான விசாரணையை வருகின்ற வெள்ளிக்கிழமைக்கு தள்ளி வைத்தார். அன்றைய தினம் ஆஜராகி, மீண்டும் தமிழில் தான் வாதாடுவேன் என்று அறிவித்துள்ளார் வழக்கறிஞர் பகத்சிங் அதனால் இப்போதே பரபரப்பு கிளம்பியுள்ளது.